சிங்கப்பூரில் 2026ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி முதல் ஊழியர்கள் ஓய்வுபெறுவதற்கான வயது வரம்பு 63லிருந்து 64க்கு உயர்த்தப்படவுள்ளது. மேலும், மறுவேலைவாய்ப்புக்கான வயது 68லிருந்து 69க்கு உயர்த்தப்பட இருக்கிறது. ஊழியர்கள் கூடுதல் காலம் வேலையில் இருப்பதற்கான சட்டபூர்வ பாதுகாப்பை இந்த மாற்றங்கள் அளிக்கவல்லவை.
அனைவரையும் உள்ளடக்கிய, படிப்படியாக உயரக்கூடிய வேலையிடங்களை உருவாக்குவதற்கு அரசாங்கம், நிறுவனங்களுடனும் ஊழியர்களுடனும் இணைந்து செயலாற்ற விரும்புவதைக் கருதி இந்த வரவேற்கத்தக்க மாற்றத்தை மார்ச் 4ஆம் தேதியன்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
தொடர்ந்து வேலையில் இருக்க விரும்பும் மூத்தோருக்காக, மனிதவள அமைச்சின் முத்தரப்புப் பங்காளிகளான தொழிற்சங்கங்களும் நிறுவனங்களும் 2019ல் ஓய்வுபெறும் வயதை 65ஆகவும் மறுவேலைவாய்ப்பு வயதை 70ஆகவும் 2030ஆம் ஆண்டுக்குள் உயர்த்த ஒப்புதல் தெரிவித்தன.
இதன் தொடர்பில் 2022ஆம் ஆண்டு ஜூலையில் ஒருமுறை வயது வரம்புகள் உயர்த்தப்பட்டன. மிக அண்மையில் அறிவிக்கப்பட்ட உயர்வும் முத்தரப்பு ஒப்புதலைக் குறிப்பதாக அமைந்துள்ளது.
இவை யாவும் மூத்த ஊழியர்களின் நலன்களை மெருகேற்றும் நம்பிக்கைக்குரிய முன்னேற்றங்கள். ஒட்டுமொத்தமாக, முதலாளிகள் இணக்கத்துடன் நடந்துகொண்டுள்ளனர். 2023ல் தகுதிபெற்றதுடன் தொடர்ந்து வேலை செய்ய விருப்பம் தெரிவித்த நிலையில் 10ல் ஒன்பதுக்கு மேற்பட்ட மூத்த ஊழியர்களுக்கு மறுவேலைவாய்ப்பு வழங்கப்பட்டது.
வயதில் மூத்த ஊழியர்களை வேலையில் அமர்த்தும் பொறுப்பு, நிறுவனங்களை மட்டும் சார்ந்ததன்று. இப்பிரிவினரை வேலையில் அமர்த்தி அவர்களது திறனை மேம்படுத்த மனிதவள அமைச்சின் ஆதரவையும் நிறுவனங்கள் நம்பியிருக்கலாம். அத்தகைய திட்டங்கள் பல நடப்பில் உள்ளன.
மூப்படையும் சமுதாயத்தில் மூத்த குடிமக்களின் வேலை நியமனமும் வேலைத்தகுதியும் பொருளியல் ரீதியாக நிலைப்படுத்தும் ஒரு கூறு. மக்கள் தங்களால் இயன்ற காலத்திற்குத் தொடர்ந்து ஆக்கவளத்துடன் இருக்க வேண்டும். முன்கூட்டியே மற்றும் தேவையற்ற ஓய்வு பெறுதலுக்கு ஆளாகக்கூடாது.
சமுதாயத்தின் பொருளியல் வளங்களில் மூத்த குடிமக்களும் கருதப்பட வேண்டும் என்பதை இந்த ஓய்வுபெறும்/மறுவேலைவாய்ப்பு கொள்கை வலியுறுத்துகிறது. வயது அடிப்படையிலான பாகுபாட்டைப் பொறுத்துக்கொள்ள முடியாது என்ற எச்சரிக்கையை முதலாளிகளுக்கு இது விடுக்கிறது.
சிங்கப்பூரில் 2030ஆம் ஆண்டுக்குள் நான்கில் ஒருவருக்கு 65 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதாக இருக்கும். இந்நிலையில், பொருளியல் ஒத்துழைப்பு, மேம்பாட்டு அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளில் 65 வயதுக்கும் 69 வயதுக்கும் இடைப்பட்டோருக்கான அதிக வேலை வாய்ப்பு விகிதத்தைக் கொண்ட மூன்றாவது நாடு சிங்கப்பூர்.
இந்த வயதுப் பிரிவில் உள்ள ஊழியர்களும் அதிக எண்ணிக்கையில் ஊழியரணியில் சேர்ந்து வருகின்றனர். இதனால், கடந்த ஐந்து ஆண்டுகளில் வேலை நியமன விகிதம் 5 விழுக்காட்டுப் புள்ளிகள் உயர்ந்து 2023ல் 48.3 விழுக்காடாகப் பதிவானது. ஊழியரணியில் மூத்த குடிமக்கள் இடம்பெறும் வேக விகிதத்தைத் தக்கவைத்துக்கொள்வது தேவையான ஒன்று.
அதேவேளை, தொழிலாளர் சந்தையின் ஒட்டுமொத்த நிலையைப் பொறுத்தும் மூத்த குடிமக்களின் வேலை நியமன வாய்ப்புகள் உள்ளன. அடுத்த பத்தாண்டில், முதன்மையாக ஊழியரணியின் வளர்ச்சியிலிருந்து அதிக பொருளியல் வளர்ச்சியைத் தக்கவைப்பது சிங்கப்பூருக்கு மேலும் சிரமமானதாகும். உற்பத்தித்திறன் அடிப்படையிலான வளர்ச்சியை அது கருத வேண்டியிருக்கும்.
இதற்கு, உள்ளூர் ஊழியர்களின் ஒட்டுமொத்த திறனை தொடர்ந்து முன்னேற்ற வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். உள்ளூர் ஊழியர்களின் வேலைக்குத் துணையாக வெளிநாட்டு ஊழியர்களைத் தொடர்ந்து கொண்டுவர வேண்டும். கூடுதல் உற்பத்தித்திறன் வாய்ந்த ஒரு பொருளியல் நிலை உருவாக, சிங்கப்பூரின் பொருளியல் உருமாற்றத்தில் மூத்த ஊழியர்கள் தொடர்ந்து அங்கம் வகிப்பர் என்பது உறுதி.