பாலாவின் 'அவன் இவன்' படம் மூலம் புகழ் பெற்ற ஜனனி அய்யர், இப்போது பல படங்களில் நடித்து வருகிறார். இவர் 'பிரேமம்' படத்தில் வந்த மலர் ஆசிரியை போன்றதொரு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறாராம். இப்போது 'உல்டா', 'தொல்லைக்காட்சி' உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் நடிக்கிறார் ஜனனி. "ஏ.ஆர்.முருகதாசின் உதவியாளரான விஜய் பாலாஜி இயக்கும் படம் 'உல்டா'. மனோத்துவ ரீதியிலான திகில் கதையுடன் இப்படம் தயாராகி உள்ளது.
படத்தின் பின்னணிக் குரல் பதிவு முடிவடைந்துவிட்டது. விரைவில் படம் வெளியாகுமாம். இதையடுத்து ஏ.ஆர்.முருகதாஸ், லிங்குசாமியிடம் உதவியாளராகப் பணியாற்றிய சதிக்கான் இயக்கும் படமான 'தொல்லைக்காட்சி'யின் முதற்கட்ட படப்பிடிப்பும் நிறைவு பெற்றுள்ளது. இதிலும் ஜனனிக்கு நல்ல வேடமாம். "இப்படத்தில் எனது கதாபாத்திரத்தின் பெயர் மலர். முதல் முறையாக பாரம்பரியமிக்க தமிழ்ப் பெண் வேடத்தில் நடிக்கிறேன். 'பிரேமம்' படத்தில் வந்த மலர் ஆசிரியை அனைத்துத் தரப்பு மக்களையும் கவர்ந்தார். அதேபோல என்னுடைய மலர் கதாபாத்திரமும் ரசிகர்களின் மனதை வெகுவாக கவரும்," என்கிறார் ஜனனி அய்யர்.