மேடுபள்ளம் நிறைந்த மலேசிய மண்ணை மேம்படுத்தியதில் தமிழ் மக்களின் வியர்வைக்கும், ரத்தத்திற்கும் பெரும்பங்கு உண்டு என்று கோலாலம்பூரில் நடந்த விழாவில் கவிஞர் வைரமுத்து பேசியுள்ளார். இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகளுக்கான மலேசிய சிறப்புத் தூதர் டத்தோஸ்ரீ சாமிவேலு எழுதிய 'யாதுமாகி' என்ற நூல் வெளியீட்டு விழா கோலாலம்பூரில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பங்கேற்றுப் பேசிய கவிஞர் வைரமுத்து, மலேசிய மண்ணில் நிலையாக இல்லாத நிலவியலைத் தங்கள் உழைப்பால் ஒழுங்கு செய்தவர்கள் தமிழர்கள் என்றார். "மனிதனின் ஒவ்வொரு பத்து வயதுக்கும் ஒரு குறிக்கோள் இருக்கிறது. 20 வயது என்பது கற்க. 30 வயது துய்க்க. 40 வயது உழைக்க. 50 வயது நிலைக்க. 60 வயது கொடுக்க, 70 வயது சிந்திக்க. இந்த 80 வயது என்பது மன்னிக்க. "வெற்றி பெற்றவன்தான் மன்னிப்பான். மன்னிப்பும் கேட்பான்," என்றார் வைரமுத்து. டத்தோஸ்ரீ சாமிவேலுக்கு இது மன்னிக்கும் வயது என்று குறிப்பிட்ட அவர், மலேசியா எங்கும் தமிழ்ப்பள்ளிகளை வளர்த்தெடுத்த செயலைத்தான் அவரது வாழ்நாள் சாதனையாக கருதுவதாகக் கூறினார்.