சிறிய வரவுசெலவுத் திட்ட படங்களில் அறிமுகமாகி நடித்து வந்த தன்ஷிகா, எஸ்.பி.ஜகநாதனின் 'பேராண்மை', பாலாவின் 'பரதேசி', வசந்தபாலனின் 'அரவாண்' படங்களில் நடித்ததன் மூலம் தமிழ்த் திரையுலகில் முக்கிய நடிகையானார். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகளாக 'கபாலி'யில் நடிப்பதன் மூலம் அடுத்த கட்ட பாய்ச்சலுக்குத் தயாராகி வருகிறார். தன்ஷிகா வாய்ப்புகளுக்காக போராடிக்கொண்டிருக்கும்போது கைகொடுத்த படம் 'காத்தாடி'. அண்மையில் வெளி வந்த 'கத சொல்லப்போறோம்' படத்தின் பாடல் வெளியீட்டு விழா அண்மையில் நடந்தது.
இதில் கலந்து கொண்ட தன்ஷிகா "சின்ன வயதிலேயே நடிப்பை நம்பி படிப்பை கைவிட்டேன். படிக்காத நான் நடிப்புதான் இனி எல்லாம் என்று இருந்தேன். "ஆரம்பக் காலத்தில் எத்தனையோ சிக்கல்கள், பிரச்சினைகள். அவற்றிலிருந்து என்னை காப்பாற்றி வழிநடத்தி வந்தது எனது மாமாவும் எனது தந்தையும்தான். நான் எப்போதும் ஓடிக்கொண்டே இருப்பவள். படப்பிடிப்பு இல்லாத காலங்களில் எதையாவது கற்றுக் கொண்டே இருப்பேன். "பாண்டியன் மாஸ்டரிடம் சிலம்பம் ஜிம்னாஸ்டிக் கற்றேன். இலக்கு இல்லாமல் ஓடிக் கொண்டிருந்தேன். அதன் பிறகு பெரிய படங்கள், பெரிய இயக்குநர் என்று பயணம் செய்து இன்று இந்த இடத்தில் நின்று கொண்டிருக்கிறேன். இது அனைத்துக்கும் கடவுளுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன்," என்று உருக்கமாகப் பேசி உள்ளார்.