ஆறு படங்களைக் கைவசம் வைத்திருக்கும் நயன்தாரா தமிழ், தெலுங்கு பட உலகில் நம்பர்=1 கதாநாயகியாக இருந்து வருகிறார். ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், விஷால், தனுஷ், சிம்பு என்று முன்னணி கதாநாயகர்களுடன் சேர்ந்து நாயகியாக நடித்த பெருமையும் நயன்தாராவுக்கு உண்டு.
லைட்பாய் முதல் எல்லா தொழிலாளர்களுடனும் அன்பாகப் பழகுவார், படப்பிடிப்பு இறுதி நாளில் எல்லோருக்கும் பரிசு பொருட்களை வாரி வழங்குவார், என்றெல்லாம் நயன்தாராவின் நல்ல குணங்களைப் பட உலகினர் பட்டியலிடுகின்றனர். ஆனால், இன்னொருபுறம் காதலில் அவர் தொடர்ந்து காயப்பட்டு வருகிறார். 2006ஆம் ஆண்டில் வல்லவன் படத்தில் நடித்த போது சிம்புவுடன் அவரது முதல் காதல் துளிர்த்தது.
இருவரும் திருமணம் செய்து கொள்ளவும் தயாரானார்கள். ஆனால் சில மாதங்களிலேயே அந்தக் காதல் முறிந்து போனது. அதன்பிறகு 2009ஆம் ஆண்டில் பிரபுதேவாவுடன் நயன்தாராவின் இரண்டாவது காதல் மலர்ந்தது. நயன்தாரா மதம் மாறி பிரபுதேவாவை மணந்து சினிமாவுக்கு முழுக்குப் போடவும் தயாரானார்.
ஆனால் கடைசி நேரத்தில் அந்தக் காதலும் முறிந்து போனது. மூன்றாவதாக தன்னை காதுகேளாத மாற்றுத்திறனாளி பெண்ணாக 'நானும் ரவுடிதான்' படத்தில் நடிக்க வைத்த இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்தார். இருவரும் நெருக்கமாக இருக்கும் படங்கள் வெளியாகி இவர்கள் காதலை உறுதிப்படுத்தின.
விக்னேஷ் சிவனுக்குச் சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் நயன்தாரா காதல் பரிசாக வீடு வாங்கி கொடுத்து இருப்பதாகவும் கிசுகிசுக்கள் வந்தன. ஆனால், தற்போது இந்தக் காதலும் நிலைக்கவில்லை. விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா சண்டை போட்டுப் பிரிந்து விட்டார் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதற்கான காரணம் தெரியவில்லை.
இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் நடிகை நயன்தாரா. படம்: இணையம்