முஹம்மது ஃபைரோஸ், ப. பாலசுப்பிரமணியம்
சாங்கி விமான நிலையத்தின் குடிநுழைவு சோதனைச் சாவடியை இவர் கடந்ததும் உடனடியே ஒரு ரசிகர் இவரோடு புகைப்படம் எடுத்துக்கொள்ள அணுகினார். சற்றும் தாமதிக்காது, புன்னகைத்தவாறு ரசிகரின் விருப்பத்திற்கு இணங்கினார் இவர். அவர் வேறு யாருமல்ல, நடிகை சுகாசினி மணிரத்னம்தான். 1980களில் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் எனத் தென்னிந்தியத் திரைப்பட உலகில் தனக்கென ஒரு முத்திரை பதித்துள்ள சுகாசினி, "சைமா விருது நிகழ்ச்சி ஒரு ஒன்றுகூடல் நிகழ்வு," என்றார். "நான்கு மொழிகளைச் சேர்ந்த நடிகர்கள் பலரையும் பார்க்க சந்தர்ப்பம் கிடைக்கிறது. என் நண்பர்களையும் அடுத்த தலைமுறை நடிகர்களையும் சந்திக்கும் தளமாக இந்நிகழ்ச்சியைக் கருதுகிறேன்," என்று கூறினார் சுகாசினி.
'சைமா' விருது நிகழ்ச்சியில் 'ஓ! காதல் கண்மணி' தமிழ் திரைப்படத்தை இயக்கியதற்காக 'சிறந்த இயக்குநர்' விருதுக்கு இவரின் கணவர் மணிரத்னம் நியமனம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 'சைமா' எனும் தென்னிந்திய அனைத்துலக திரைப்பட விருது விழாவில் பங்கேற்க நேற்றுக் காலை 8.30 மணிக்கெல்லாம் சிங்கப்பூர் வந்தடைந்தார் நகைச்சுவை நடிகர் சதீஷ் முத்து கிருஷ்ணன். சாங்கி விமான நிலையத்தில் மலர்ந்த முகத்துடன் காணப்பட்ட அவரை அணுகி விருது நிகழ்ச்சியில் அவரது பங்கு என்ன என்பதைக் கேட்டறிந்தது தமிழ் முரசு. "தமிழ், மலையாளப் பிரிவு விருது நிகழ்ச்சியை நானும் 'மிர்ச்சி' சிவாவும் சேர்ந்து அட்டகாசமாக வழிநடத்த விருக்கிறோம்," என்ற அவர், சிங்கப்பூரும் இங்கு வாழும் மக்களும் தமக்கு நன்கு பழக்க மாகிவிட்டதாகத் தெரிவித்தார். அண்மையில் சிங்கப்பூரில் படமாக்கப்பட்ட 'பறந்து செல்ல வா' திரைப்படத்தில் நடிப்பதற்காக இங்கு சில மாதங்கள் கழித்ததை அவர் நினைவுகூர்ந்தார்.
சாங்கி விமான நிலையத்தில் நேற்று தரையிறங்கிய நயன்தாரா (இடமிருந்து இரண்டாவது), விஷ்ணு சிவன் (வலக்கோடி), ராதிகா, விக்ரம், நித்யா மேனன் ஆகியோர் ஏற்கெனவே இங்கிருக்கும் நட்சத்திரங்களுடன் சேர்ந்து இன்றைய நிகழ்ச்சிக்கு மெருகேற்ற இருக்கின்றனர்.