அண்மையில் பெண் நாய் ஒன்றினை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் இருவர் நான்காவது மாடியிலிருந்து கீழே வீசிய சம்பவத்தை திரிஷா வன்மையாகக் கண்டித்து, அந்த மாணவர்களின் மருத்துவப் படிப்பிற்கான உரிமத்தை ரத்து செய்யவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார். நடிகை திரிஷா 'பீட்டா' விலங்குகள் நல அமைப்பில் உறுப்பினராக இருக்கிறார். இவருக்கு நாய்கள் என்றால் அலாதிப் பிரியம். தெருக்களில் கவனிப்பாரின்றி கிடக்கும் நாய்களைக் கண்டால் அதைத் தூக்கிச்சென்று அதற்கு சிகிச்சை அளித்து பாதுகாப்பான இடங்களில் ஒப்படைப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் மாணவர் ஒருவர் நாய்க்குட்டியை நான்காவது மாடியிலிருந்து கீழே வீசுவதிலிருந்து அந்த நாய் கீழே விழுந்து துடிக்கும் வரை பதிவான காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. அந்தக் காணொளியைப் பார்த்த விலங்கு நல ஆர்வலர்கள் அந்த மாணவர்களுக்கு எதிராக கண்டனங்களை வலைத்தளங்களில் பதிவு செய்தனர். அதன் தொடர்பாக நாகர்கோயில், திருநெல்வேலியைச் சேர்ந்த சுதர்சன் கௌதம், ஆசிஸ் பால் ஆகிய இருவர்தான் நாயைத் துன்புறுத்தினர் என்பதும் இருவரும் குன்றத்தூர் அருகேயுள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு பயில்பவர்கள் என்பதும் தெரியவந்தது. இதுதொடர்பாக மாணவர்கள் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இருவரும் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
இதனிடையே நடிகை திரிஷா இந்த சம்பவத்திற்குத் தன் 'டுவிட்டர்' பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில் அவர் "கீழே விழுந்த நாயைக் காப்பாற்றிய நிஜ கதாநாயகர்களான ஷ்ராவன், ஜெனிபர், ஆண்டனி ஆகியோருக்கு நன்றி. இந்தக் குற்றச்செயல் புரிந்தவர்களின் மருத்துவ உரிமத்தை சம்பந்தப்பட்ட துறையினர் ரத்து செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்," என்று கூறியிருக்கிறார்.