நித்திஷ் செந்தூர்
உலகமெங்கும் தொற்றிக்கொண்டிருக்கும் 'கபாலி காய்ச்சல்' சிங்கப்பூர் ரசிகர்களையும் விட்டு வைக்கவில்லை. படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியான நாளிலிருந்து ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது 'கபாலி' திரைப்படம். 'கபாலி' திரைப்படத்தின் 'பிரிமியர்' காட்சிகள் நேற்று முன்தினம் இரவு 9.30, 12.30, விடிகாலை 4.00 மணிக்கு திரையிடப்பட்டன. இரவு 9.30 மணிக் காட்சியைப் பார்க்க நுழைவுச்சீட்டுகளை வாங்கியிருந்த ரசிகர்கள் இரவு 7.00 மணிக்கே கோல்டன் மைல் கட்டடத்தில் அமைந்துள்ள 'ரெக்ஸ்' திரையரங்கின் முன்பு கூடத் தொடங்கினர். ரஜினியின் உருவத்துடன் 'கபாலி', 'நெருப்புடா', 'மகிழ்ச்சி' போன்ற வார்த்தைகள் பொறிக்கப்பட்ட 'டி' சட்டைகளை அணிந்து வந்த ரசிகர்கள் தங்களின் உற்சாகத்தை வெளிப்படுத்தினர். சுமார் 1,000 ரஜினி ரசிகர்கள் 'கோல்டன் மைல் ரெக்ஸ்' திரையரங்கில் முதல் நாள் முதல் காட்சியைப் பார்க்கும் வாய்ப்பைப் பெற்றனர்.
ஒட்டுமொத்தத்தில் ரசிகர்கள் 'மகிழ்ச்சி' உணர்வுடன் படம் முழுவதும் கைதட்டல்களுடன் படத்தைக் கண்டுகளித்தனர். ரஜினி 'கட் அவுட்' வெளியே வைக்கப்பட்டிருந்தது. குழுக்களாக வந்திருந்தவர்கள் ரஜினியுடன் 'செல்ஃபி' எடுத்து முகநூல்களில் உடனுக்குடன் பெருமையுடன் பகிர்ந்துகொண்டார்கள். 'கபாலி' படம் மலேசியாவில் முதலாவதாகவும் சிங்கப்பூரில் இரண்டாவதாகவும் திரையிடப்பட்டது. அதன் பின்னர்தான் மற்ற நாடுகளில் வெளியிடப்பட்டது. அமெரிக்காவில் உள்ள 44 நகரங்களில் 'கபாலி' படம் வெளியாக இருக்கிறது. ஒரு தமிழ்ப்படம் வெளிநாடுகளில் இந்த அளவுக்குத் திரையிடப்படுவது இதுவே முதல் முறையாகும்.
இவர் இரவில் ஒளிரும் தன்மைகொண்ட ரஜினி படத்தைப் போட்ட சட்டையை அணிந்து 'ரெக்ஸ்' திரையரங்கிற்கு 'கபாலி' படம் பார்க்கச் சென்றிருந்தார்.