'ரெமோ' படத்தின் இயக்குநர் பாக்யராஜ் கண்ணன். சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தையும் இவரே இயக்குவதற்கு ரூபாய் 5 கோடி சம்பளம் பேசப்பட்டிருக்கிறதாம். சிவகார்த்திகேயன் தன்னுடைய நண்பர் பெயரில் தயாரித்து வரும் முதல் தயாரிப்பான 'ரெமோ' திரைப்படம் ஆயுதபூசை விடுமுறையை முன்னிட்டு அக்டோபர் முதல் வாரம் வெளியாகவிருக்கிறது. பாண்டியராஜின் உதவியாளரான பாக்யராஜ் கண்ணன் இயக்கும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்துள்ளார். அனிருத் இசை அமைத்துள்ள இப்படத்தின் முன்னோட்டம் ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் 'ரெமோ' படத்தின் பாடல்களை செப்டம்பர் 5ஆம் தேதி வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். இதனை இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமே அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. இதற்கிடையில் 'ரெமோ' படத்தின் முதல் பிரதியை ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், சிவகார்த்திகேயன், அவரது நண்பர் ஆர்.டி.ராஜா ஆகியோர் அண்மையில் பார்த்துள்ளனர். அவர்களுக்கு 'ரெமோ' படம் மிகவும் பிடித்துவிட்டதாம். எனவே சிவகார்த்திகேயன் நடிப்பில் மீண்டும் ஒரு படம் இயக்கும் வாய்ப்பை பாக்யராஜ் கண்ணனுக்கு வழங்கியுள்ளனர்.
அவர் இயக்கும் அடுத்த படத்தையும் சிவகார்த்திகேயனின் நிறுவனமே தயாரிக்க முடிவு செய்துள்ளது. அது மட்டுமல்லாமல் 'ரெமோ' படத்தை இயக்க பாக்யராஜ் கண்ணனுக்கு சில லட்சங்கள் சம்பளம் கொடுத்த ஆர்.டி. ராஜா, இரண்டாவது படத்தை இயக்க ரூபாய் 5 கோடி சம்பளம் தரச் சம்மதித்து இருக்கிறார். திடீரென்று பாக்யராஜ் கண்ணனுக்கு அடித்த யோகத்தைப் பற்றித்தான் தற்பொழுது கோலிவுட்டில் அதிகம் பேசப்படுகிறதாம். இதற்கிடையே படத்தின் நாயகியும் இந்தப் படத்தின் மூலம் தனக்கு இனிமேல் அதிகப் படங்கள் வர வாய்ப்பு இருக்கிறது என்ற கனவுலகில் மிதந்து கொண்டிருக்கிறாராம். இவர் நடிப்பில் 'ரெமோ', 'தொடரி', தெலுங்கில் 'நீனு லோக்கல்', 'அய்னா இஷ்டமுனு நுவு' ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன.
அந்தப் படங்களுக்குக் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து 'பாலிவுட்'டில் கால் பதிப்பதற்கு முயற்சி செய்யலாமா என முடிவெடுக்கப் போகிறாராம். தமிழ், தெலுங்கில் வெற்றிகரமான நடிகையாக வலம் வந்த அசின் பாலிவுட்டுக்குச் சென்றதும் காணாமல் போனது பற்றி கீர்த்தியிடம் சிலர் சொல்லி இருக்கிறார்கள். அதனால், 'அகல கால் வைக்கும்போது யோசித்துத்தான் செயல்பட வேண்டும்' என்பதில் உறுதியாக இருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.