நுங்கம்பாக்கத்தில் சுவாதிக் கொலை செய்யப்பட்டபோது அந்தக் காட்சியை ஒரு சிலராவது பார்த்திருப்பார்கள். யாருமே காப்பாற்ற வரவில்லை என்பது ஒருபுறம் இருந்தாலும் அப்படி ஒரு கொலையைப் பார்த்தேன் என்றுகூட யாரும் போலிசிடமும் நண்பர்களிடமும் சொல்லவில்லை. ஆனால் யாரோ ஒருவருக்கு அந்தக் கொலையைத் தடுக்காமல் போய்விட்டோமே போலிசில் சாட்சி சொல்லி குற்றவாளியைக் காட்டிக் கொடுக்காமல் போய்விட்டோமே என்ற குற்ற உணர்ச்சி இருக்கும். 'குற்றமே தண்டனை' படமும் அதைத்தான் சொல்ல வருகிறது.
சுவாதி கொலை ரயில் நிலையத்தில் நடந்தது என்றால் 'குற்றமே தண்டனை'யில் வரும் கொலை நடுத்தர மக்கள் வசிக்கும் ஒரு காலனியில் நடக்கிறது. காலனியில் வசிக்கும் ஐஸ்வர்யா ராஜேஸை ஒருதலையாகக் காதலித்து, அதை ஐஸ்வர்யா ஏற்றுக் கொள்ளாததால் அவரை அவர் வீட்டிற்கே சென்று கொலை செய்கிறான் வில்லன். அதைப் பார்த்த ஒரே சாட்சி விதார்த். ஆனால் அவர் தேவையில்லாத பிரச்சினை நமக்கு எதற்கு என்று ஒதுங்கிப் போகிறார். கொலையைத் தடுக்கவும் இல்லை. கொலையாளி யார் என்று தெரிந்தும் அதை போலிசிடம் சொல்லவும் இல்லை. ஆனால் அப்படிச் செய்யத் தவறி விட்டோமே என்ற குற்ற உணர்ச்சி அவரை கொல்கிறது. அதிலிருந்து மீள அவர் என்ன செய்கிறார் என்பதுதான் கதை. விதார்த் நடித்து, தயாரித்து இருக்கும் இந்தப் படத்தை 'காக்கா முட்டை' மணிகண்டன் ஒளிப்பதிவு செய்து இயக்கி இருக்கிறார்.