சூர்யாவுடன் நடிக்க ஆசையாக உள்ளது என்று கூறியுள்ள நடிகை ஸ்ரீதிவ்யா, அடுத்து 'வருத்தப்படாத வாலிபர் சங்க' தலைவருடன் மீண்டும் ஜோடி போட காத்துக் கொண்டிருக் கிறாராம். இதையும் அவரேதான் தனது திருவாய் மலர்ந்து தெரிவித்துள்ளார். கார்த்தி வித்தியாசமான கதா பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'காஷ்மோரா'. இப்படத்தில் நயன்தாரா, ஸ்ரீதிவ்யா என அவருக்கு இரண்டு நாயகிகள். கதைப்படி இரண்டு நாயகிகள் இருந்தாலும் கார்த்தி யாரையும் காதலிக்கமாட்டாராம். வளர்ந்து வரும் நடிகையான ஸ்ரீதிவ்யா தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகையான நயன் தாராவுடன் முதல்முறையாகச் சேர்ந்து நடித்துள்ளார். படப்பிடிப்பின் போது பெரிய நடிகை என்கிற பந்தா இல்லாமல், நயன்தாரா எளிமையாகப் பேசிப் பழகியதாகப் பாராட்டுப் பத்திரம் வாசிக்கிறார் ஸ்ரீதிவ்யா.
"நயன்தாராவைப் பார்த்து நான் மிரளவில்லை. அவர் பெரிய நடிகை என்கிற நினைப்பின்றி நட்புடன் பழகினார். அவர் மிகவும் அழகாக உள்ளார். நாங்கள் இருவரும் சேர்ந்து நடித்தது ஒரேயொரு நாள்தான். எனினும் அது மறக்க முடியாத அனுபவம்," என்கிறார் ஸ்ரீதிவ்யா. தான் அதிக சம்பளம் கேட்பதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என்று சொல்பவர், நல்ல கதைகளுக்கு மட்டுமே முன்னுரிமை தருகிறாராம். "நான் அதிக சம்பளம் எல்லாம் கேட்பது இல்லை.
சம்பள விஷயத்தில் கறாராக இருப்பதாக வெளியாகும் தகவல்களில் உண்மை இல்லை. யாரோ விஷமிகள் என்னைப் பற்றித் தவறான தகவல்களைப் பரப்புகிறார்கள். "சூர்யா சாருடன் சேர்ந்து ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்று ஆசையாக உள்ளது. இந்த ஆசை விரைவில் நிறைவேறும் என நம்புகிறேன்," என்கிறார் ஸ்ரீதிவ்யா. சிவகார்த்திகேயன் சேர்ந்து நடித்த 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படம் மூலம் அம்மணிக்கு நல்ல பெயர் கிடைத்தது. இந்நிலையில் மீண்டும் சிவாவுடன் சேர்ந்து நடிக்க காத்துக்கொண்டிருக்கிறார். ஆனால் அந்த வாய்ப்புதான் கிடைத்த பாடில்லை. எனவேதான் முன்னணி நாயகனான சூர்யாவுடன் நடித்தால் தனது மதிப்பு அதிகரிக்கும் எனத் திட்டமிடுகிறாராம் ஸ்ரீதிவ்யா.