சத்தமில்லாமல் சில நல்ல காரியங்களைச் செய்வது சில நடிகர், நடிகைகளின் வழக்கம். அதன்பிறகு அது வெளியே தெரிவதில் தவறில்லை. நடிகை சினேகாவும் அப்படித்தான். எனினும் இம்முறை அவர் செய்த நல்ல காரியம் வெளியே தெரிந்துள்ளது. நேற்று முன்தினம் நலிந்த தமிழக விவசாயிகள் 10 பேருக்கு தனது கணவரும் நடிகருமான பிரசன்னாவுடன் சேர்ந்து 2 லட்சம் ரூபாயை நன்கொடையாக வழங்கி உள்ளார். தமிழகத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக அனைவரும் குரல் கொடுத்து வரும் வேளையில் பிரசன்னா, சினேகா தம்பதியர் அளித்துள்ள நன்கொடை பலரது பாராட்டுகளைப் பெற்றுத் தந்துள்ளது.
இந்த நிகழ்ச்சி நடிகர் விஷாலின் மூலம் துவக்கி வைக்கப்பட்ட 'விவசாயிகளின் நண்பர்' எனும் அமைப்பால் ஒருங்கிணைக்கப்பட்டது. நடிகர் விஷாலும் தனிப்பட்ட வகையிலும் தனது அமைப்பின் மூலமாகவும் விவசாயிகளுக்கு உதவிக்கரம் நீட்டி வருகிறார். "விவசாயிகள்தான் நம் நாட்டின் முதுகெலும்பைப் போன்றவர்கள். அவர்களால் பயனடையும் நாம் அவர்களது உழைப்பை, தியாகத்தை மறந்துவிடக் கூடாது. எல்லோரும் முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டும்," என்கிறார்கள் பிரசன்னா, சினேகா தம்பதியர்.