இதிகாச பாணியிலான திரைப் படங்களை இந்தியாவிலும் உருவாக்கி, உலகம் முழுவதும் ஆர்வத்தை ஏற்படுத்த முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறார் இயக்குநர் ராஜமௌலி. இந்திய இயக்குநர்களில் உச்சாணிக் கொம்பில்போய் அமர்ந்திருக்கிறார் இவர். இவரைப் பாராட்டிக்கொண்டே போகலாம் அந்த அளவிற்கு உலகத்தையே இந்தியாவின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் அசாத்திய சூரனான இயக்குநர் ராஜமௌலி. இதுவரை இந்திய திரையில் எத்தனையோ சரித்திரக் கதைகள் படமாக எடுக்கப்பட்டிருந்தாலும் ஒன்று அவை வணிக ரீதியாக இருந்து தரத்தில் குறையாகவும் அல்லது உலகத் தரத்தில் இருந்து மக்களிடம் வணிக ரீதியில் தோல்வி அடைந்திருக்கும்.
ஆனால் தரத்திலும் ரசனையிலும், புரிதலிலும் எவ்வளவு பிரம்மாண்டமோ அதன் ஒவ்வொரு காட்சியையும் எளிமையாக புரிய வைத்து, அனுபவிக்க வைக்கும் நோக்கத்திற்காக தன்னுடைய அயராத உழைப்பைக் கொடுத்திருக்கிறார்கள் ராஜமௌலியும் அவரின் குழுவினரும். நாடி, நரம்பு, மூளை, சதை என அத்தனையிலும் திரையைப் பற்றியே ஊறிப் போன ஒருவரால்தான் இதுபோன்ற படத்தை எடுக்க முடியும். அந்த ஒருவர் நான்தான் என ஒவ்வொரு காட்சியிலும் மார்தட்டி, கம்பீரமாக நிற்கிறார் ராஜமௌலி.