'பிரேமம்' மலையாளப் படத்தின் மூலம் தென்னிந்திய இளையர்களின் மனதை மொத்தமாகக் கொள்ளையடித்துள்ளார் சாய் பல்லவி. அதன் பிறகு அவரைப் பற்றி அதிக பேச்சு இல்லை. சாய் பல்லவியைத் தமிழ்ப் படத்தில் நடிக்க வைக்க பலரும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். மணிரத்னத்தின் 'காற்று வெளியிடை', விக்ரமின் 'ஸ்கெட்ச்' உள்ளிட்ட படங்களில் நடிக்க தேடி வந்த வாய்ப்புகளை அவர் ஏற்க மறுத்துவிட்டார்.
இந்நிலையில், கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற 'சார்லி' படத்தின் தமிழ் மறுபதிப்பில் மாதவன் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளாராம் சாய் பல்லவி. இப்படத்தை இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்க இருந்தார். இந்நிலையில், அதற்கு முன்னதாக பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதை ஒன்றை விஜய் இயக்க திட்டமிட்டுள்ளார். அந்தப் படத்திலும் நடிக்க சாய் பல்லவி ஒப்பந்தமாகி இருப்பதாகக் கூறப்படுகிறது. இப்படத்திற்கு `கரு' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்.