நடிகை சார்மி 'பைசா வசூல்' என்ற தெலுங்கு படத்திற்காக ரூ.4 கோடி சம்பளமாகப் பெற்றிருக்கிறார். அவர் நடிப்பிற்காக அந்த சம்பளம் அவருக்கு கிடைக்கவில்லை. அவர் அந்தப் படத்தில் நடிக்கவே இல்லை. ஆனால் அவருக்கு சம்பளம் 4 கோடி. இதைக் கேட்டதிலிருந்து முன்னணி நடிகைகள் முதல் வளர்ந்து வரும் நடிகைகள் வரை அவரைப் பின்பற்றலாமா என்ற யோசனையில் ஈடுபட்டிருப்பதாகத் தமிழக தகவல்கள் வெளிவருகின்றன. கோலிவுட் நடிகைகள் அதிகபட்சமாக ரூ.3 கோடி சம்பளம் வாங்கி இருக்கின்றனர். அதுவும் நயன்தாரா மட்டுமே தற்பொழுது ரூ.4 கோடி கேட்டிருப்பதாகவும் அதற்கு தயாரிப்பாளர்கள் எந்த முடிவுக்கும் வராமல் யோசனையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் கைவசம் எந்தப் படங்களும் இல்லாத நிலையில் நடிகை சார்மி ரூ.4 கோடி சம்பளம் வாங்கியிருப்பது பரபரப்பாகப் பேசப்படுகிறது. டோலிவுட் இயக்குநர் பூரி ஜெகனாத்துடன் நல்ல புரிதலுடன் இருக்கிறார் சார்மி. என்.டி. பாலகிருஷ்ணா நடிக்கும் 'பைசா வசூல்' படத்தை பூரி ஜெகனாத் இயக்குகிறார். டான் வேடத்தில் பாலகிருஷ்ணா நடிக்கும் இந்தப் படத்திற்கு அனூப் ரூபன்ஸ் இசையமைக்கிறார். இப்படத்திற்குப் பல தலைப்புகளைப் பரிசீலித்து வந்த பூரி ஜெகன்னாத், உஸ்தாத், ஜெயபாளையம் போன்ற தலைப்புகளில் ஒன்று உறுதிசெய்யப்படும் என்று சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். ஆனால், அவர் முன்பு பரிசீலணை செய்து வருவதாகக் கூறப்பட்ட எந்த தலைப்பையும் எடுத்துக்கொள்ளாமல் பாலகிருஷ்ணாவின் பிறந்தநாள் அன்று 'பைசா வசூல்' என்ற ஒரு தலைப்பை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் இயக்குநர் பூரி ஜெகன்னாத். இந்தப் படம் செப்டம்பர் 29ஆம் தேதி திரைக்கு வருவதையும் உறுதிப்படுத்தியிருக்கிறார் பூரி ஜெகன்னாத்.
இந்தப் படத்தின் வரவுசெலவுத் திட்டம் சுமார் ரூ.32 கோடி. பூரியின் சிபாரிசால் சார்மி படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் பொறுப்புப் பெற்றார். நடிகர், நடிகைகளை ஒருங்கிணைப்பது, படப்பிடிப்புப் பணிகளைக் கவனித்துக்கொள்வது போன்ற வேலைகளைச் செய்தார் சார்மி. இதன் படப்பிடிப்பு போர்ச்சுகல் நாட்டில் 70 நாட்கள் நடந்தன. இதற்கான பணிகளைக் கவனித்த சார்மிக்கு ரூ.4 கோடி சம்பளம் தரப்பட்டதாகக் கூறப்படுகிறது. 5 படங்கள் நடித்திருந்தால் கூட சார்மிக்கு இதில் பாதி அளவு சம்பளம் கூடக் கிடைத்திருக்காது. ஆனால் சாதுர்யமாக நிர்வாகத் தயாரிப்பாளர் பொறுப்பை ஏற்று பெரிய தொகையைச் சம்பளமாகப் பெற்றிருக்கிறார். படத்தில் நடிக்காமலே இவ்வளவு பெரிய தொகையைச் சார்மி சம்பளமாகப் பெற்றதையறிந்து சக நடிகைகள் அதிர்ச்சியில் வாயடைத்துப்போய் உள்ளார்களாம்.