இசையமைப்பாளர் இளையராஜா, ‘96’ திரைப்படத்தில் தமது பாடல்களின் பயன்பாடு அவசியமில்லாதது என்று ‘யூடியூப்’ ஒளிவழி ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போது கூறியுள்ளார். ஒரு ‘பீரியட்’ படத்தை எடுப்பவர்கள் அந்தக் காலத்திற்கு ஏற்றாற்போல் இசையமைக்கவேண்டும் என்றும் இன்னொருவரின் பாடலைப் பயன்படுத்துவது அவசியமில்லாதது என்றும் இளையராஜா அந்தப் பேட்டியில் கூறினார். இது ஒரு பலவீனம் என்றும் ஆண்மையில்லாத்தனமாக இருக்கிறது என்றும் அவர் சாடியுள்ளார்.
இளையராஜா தமது பாடல்களின் காப்புரிமை மீறப்படுவதை மிகக் கடுமையாக கருதுவதை அண்மையில் சில சம்பவங்கள் காட்டுகின்றன. தமது பாடல்களைப் பாட தம்மிடம் அனுமதி கேட்டுப் பெறவேண்டும் என்று இளையராஜா பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியத்திடம் கடிதம் அனுப்பியதை அடுத்து அவ்விருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அவர்கள் சமாதானமாகிவிட்டதாக கடந்த மாதம் தகவல் வெளிவந்தது.
இந்நிலையில் இளையராஜாவின் இந்த விமர்சனம் தேவையற்றது என்று ‘96’ படக்குழுவினர் கூறியுள்ளனர். அதனை அடுத்து, தமது போக்கு கடுமையாக இருந்தாலும் அது தமது இயல்பு என்று இளையராஜா மற்றொரு பேட்டியில் ஒப்புக்கொண்டதாகத் திரை ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.