பெண்களுக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டதாக பேச்சளவில் கூறிக்கொண்டு உள்ளோமே தவிர இன்னும் பெண்கள் எதிர்பார்க்கும் முழு சுதந்திரம் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார் நடிகை மகிமா நம்பியார்.
“நாட்டில் பெண்களுக்கான பாதுகாப்பு என்பது பெரும் தலைவலி தரும் பிரச்சினையாகவே உள்ளது. எல்லா ஆண்களையும் ஒட்டுமொத்தமாக கெட்டவர்கள் என்று குறை கூறிவிட முடியாது. நூற்றில் 10 பேர் அப்படியும் இப்படியுமாகத்தான் இருப்பார்கள்.
“பெண்களுக்கு எதிராக குற்றம் புரிபவர்களைப் பார்க்கும்போது அவர்களைக் கொன்றுபோட்டு விடலாமா என்று எண்ணத் தோன்றும். அந்த அளவுக்கு எனக்கு கடும் கோபம் வரும்.
“பெண்கள் பாதுகாப்புக்கு என்னால் முடிந்ததை கண்டிப்பாகச் செய்வேன்,” என்று உறுதியாகக் கூறியுள்ள மகிமா, “ஊடகத்தில் வெளி வரும் செய்திகளைப் படிக்கும்போது பெண்களுக்கான சுதந்திரம் இன்னும் முழுமையாகக் கிடைக்கவில்லை என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது,” என்கிறார்.
‘சாட்டை’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான மகிமா நம்பியார், தற்போது விக்ரம் பிரபுவுடன் ‘அசுரகுரு’, ஆர்யாவுடன் ‘மகாமுனி’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
இப்படங்கள் குறித்து மகிமா பேசுகையில், “அசுரகுரு’ படத்தில் நான் துப்பறியும் பெண் பாத்திரத்தில் நடித்துள்ளேன்.
“விக்ரம் பிரபு சினிமா பற்றி நன்கு தெரிந்து வைத்துள்ளார். அவரது நடிப்பை மட்டுமின்றி அவர் நடிக்கும் முந்தைய, பிந்தைய காட்சிகள் குறித்தும் அறிந்துகொள்கிறார். அவர் பேசவேண்டிய வசனம் மட்டுமின்றி அடுத்தவரின் வசனத் தையும் 200% ஞாபகம் வைத்துள்ளார். அவருடன் பணியாற் றியது நல்ல அனுபவமாக இருந்தது. முதல் காட்சியிலேயே பைக்கில் அவரை பின்னால் அமரவைத்து ஓட்டினேன்.
“ஓரிரு காட்சியில் ‘தம்’ அடிக்கும் காட்சி இடம்பெறும். இதற்காக நான் சிறப்புப் பயிற்சி பெறவில்லை என்றாலும் சிகரெட் பிடிக்கும்போது சிரமமாக இருந்தது. புகையை என் தொண்டைக்குக் கீழே இறங்க அனுமதிக்கவில்லை. இதனால் இருமல் வராமல் தடுக்க முடிந்தது.
“அடுத்து சாந்தகுமார் இயக்கத்தில் ஆர்யா, இந்துஜா நடிக்கும் ‘மகாமுனி’ படத்தில் பத்திரிகை நிருபராக வருகிறேன். கேரளாவில் அஞ்சல் வழி எம்.ஏ. ஆங்கில இலக்கியம் படிக்கிறேன். படித்துக்கொண்டே சினிமாவில் நடிப்பதில் எந்த ஒரு சிரமமும் இல்லை.
“சாட்டை 2’ படத்தில் நான் சம்பளம் அதிகமாக கேட்டதால் நடிக்கவில்லை என்ற தகவல் வெளியானது. ஆனால் உண்மையிலேயே அவர்கள் என்னை அணுகவில்லை என்பதே சரியானது.
“திரையுலகில் யார் போலவும் வரவேண்டும் என்ற ஆசை எதுவும் எனக்கில்லை. எனக்குப் பெயர் வாங்கித் தரும்படியான சிறந்த பாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன்.
“எனக்கு அஜித், நயன்தாரா, சமந்தாவை மிகவும் பிடிக்கும். அஜித்தின் சிகை அலங்காரம் மிகவும் பிடிக்கும். நடிக்க வந்துவிட்டால் எந்த மாதிரியான சவாலான பாத்திரம் கிடைத்தாலும் அதை தவறவிடாமல் நடிக்கவேண்டும்.
“கவர்ச்சி என்பது அவரவர் கண்ணோட்டத்தில்தான் இருக்கிறது. அதிகமான கவர்ச்சிக்கு நான் பொருந்தமாட்டேன். ரசிகர்கள் விரும்புவதுபோல்தான் நடிக்கமுடியும். எனக்கு ஒரு எல்லை உள்ளது; அந்த எல்லையை மீறாமல் நடிப்பேன்,” என்கிறார் மகிமா.