பதினைந்து வயதில் இசைப்பயணத்தைத் தொடங்கிய யுவன் சங்கர் ராஜாவுக்குத் தற்போது 40 வயதாகிறது. இந்நிலையில் கடந்த காலத்தைத் தாம் திரும்பிப் பார்த்ததே இல்லை என்று பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலத்தைப் புரட்டிப் பார்த்தால் மனதில் பதற்றம் ஏற்படும் என்றும் நடந்து முடிந்தவற்றைப் பற்றித் தாம் அறவே யோசிப்பதில்லை என்றும் கூறியுள்ளார் யுவன். மேலும் எதிர்காலம் என்பது எப்போதுமே சவாலானது என்றும் கூறியுள்ளார்.
“கடந்த காலத்திலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களை மட்டும் நான் மறப்பதில்லை. அடுத்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு எங்கு இருப்பேன் என்பதை நினைக்கும் ஆளல்ல நான். நிகழ்காலத்துக்காக வாழ்பவன். எப்போதுமே அர்ப்பணிப்புடனும் ஆர்வத்துடனும் எனது பணியைச் செய்து வருகிறேன்,” என்கிறார் யுவன்.
தற்போது பாடல்களைத் தொகுத்து வழங்கும் இணைய தளங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது நல்ல விஷயம் என்று குறிப்பிடுபவர், இதன் மூலம் இசைக் கலைஞர்களுக்கு வருவாய் கிடைப்பதை நல்ல வரமாகக் கருதுவதாகச் சொல்கிறார்.
“நமது பாடல்களை எவ்வளவு பேர் எங்கிருந்து கேட்டிருக்கிறார்கள், எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் அதிகம் கேட்கிறார்கள்? என்பதையெல்லாம் கண்காணிக்க முடியும்,” என்கிறார் யுவன்.
இதற்கிடையே தனது தந்தை இளையராஜாவின் வாழ்க்கையைத் திரைப்படமாக்கத் திட்டமிட்டுள்ளாராம். அதில் இளையராஜாவாக தனுஷ் நடிக்க உள்ளார். மேலும் இந்தப் படத்தின் மூலம் யுவன் இயக்குநராகவும் அவதாரமெடுக்க உள்ளார். ‘ஜா த ஜர்னி’ என்று தலைப்பு வைக்க உள்ளாராம்.
“அப்பா செய்த சாதனைகள் மகத்தானவை. அவற்றைப் பதிவு செய்யும் ஒரு படைப்பை உருவாக்க விரும்புகிறேன். இப்படியொரு திரைப்படம் உருவாகும் பட்சத்தில் அதில் நடிக்க தனுஷ்தான் மிகப் பொருத்தமானவராக இருப்பார்,” என்கிறார் யுவன் சங்கர் ராஜா.