கதையைப் பொறுத்தே ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொள்வது குறித்து முடிவெடுப்பதாகச் சொல்கி்றார் பிரசன்னா.
‘மாஃபியா’வில் ஸ்டைல் வில்லனாக நடித்து அசத்தியவருக்கு விமர்சகர்களிடம் இருந்து பலத்த பாராட்டு கிடைத்துள்ளது. இதையடுத்து மீண்டும் தனி நாயகனாகவும் நடிப்பதற்கு தயாராகி வருகிறார்.
தற்போது கொரோனா கிருமித்தொற்றுப் பீதியால் திரையுலகம் முடங்கியுள்ள நிலையில், வீட்டிலிருந்தபடியே ரசிகர்களுடன் சமூக வலைத்தளங்களில் உரையாடி வருகிறார் பிரசன்னா.
அண்மைய கலந்துரையாடலின்போது தன்னிடம் கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு அவர் வெளிப்படையாகவும் கொஞ்சம்கூட தயக்கமின்றியும் பதிலளித்தார்.
“‘மாஃபியா’ மிகவும் எளிமையான கதை என்பது எனக்குத் தெரியும். இயக்குநர் கார்த்திக் நரேனிடம் ஒரு பார்வை இருந்தது. எனது சின்ன அனுபவத்தைக் கொண்டு அதை ஒரு வழக்கமான வில்லன் போல ஆக்காமல் பார்த்துக் கொண்டேன்.
“மேலும் என்னைப் பொறுத்தவரை அந்த வில்லன் கதாபாத்திரமும் ஒரு கதாநாயன்தான். அந்தப் பார்வையுடன்தான் அந்தப் பாத்திரத்தை அணுகினேன். திரையில் நான்தான் நாயகன் என்றும் நம்பினேன். அதற்குப் பலன் கிடைத்தது,” என்றார் பிரசன்னா.
ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்பதை எதைக்கொண்டு தீ்ர்மானிக்கிறீர்கள்? என்ற கேள்விக்கு விரிவாகப் பதிலளித்தார்.
“என்னைப் பொறுத்தவரை ஒரு கதைதான் படத்தின் வெற்றிக்கு முக்கியமான அம்சம். கதையைப் பொறுத்துதான் எனது முடிவும் இருக்கும். இன்னும் சில விஷயங்களையும் பரிசீலிக்க வேண்டியதும் அவசியம் தான்.
“யாரிடமும் உதவி இயக்குநராக இல்லாத ஓர் அறிமுக இயக்குநர் கதை சொன்னால் அவரது படத்தில் நடிப்பீர்களா? என்று கேட்கிறீர்கள். நிச்சயம் நடிப்பேன்.
“நான் எதிர்பார்க்கும் அம்சங்கள் இருக்கும் பட்சத்தில் எந்தவொரு படத்திலும், யாருடைய இயக்கமாக இருந்தாலும் நடிப்பேன்,” என்றார் பிரசன்னா.
அறிமுக இயக்குநர்கள் தமிழ் சினிமாவில் உரிய முக்கியத்துவத்துடனும் மரியாதையுடனும் வரவேற்கப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், திரைத்துறைக்கு அதிகமானோர் வருவது அதன் வளர்ச்சிக்கு உதவும் என்றார்.
ஊரடங்கைப் பயன்படுத்தி தனது குழந்தைகளுடன் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழித்து வருகிறாராம் பிரசன்னா. மேலும் ஓவியம் வரைவதிலும் கவனம் செலுத்துகிறாராம்.
“குழந்தை விஹானுடன் ஏபிசிடி, 123 எழுதுகிறேன். பொம்மைகள் வைத்து விளையாடுகிறேன். எனது மகள் ஆத்யந்தாவோடு சேர்த்து எனது செல்ல நாய்கள் பாப்லோவும் மார்லோவும் என்னை எப்போதும் ஓய்வெடுக்க விடுவதில்லை.”
விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பு வந்தால் எப்படி இருக்கும்? என்ற கேள்விக்கு, “அப்படியொரு வாய்ப்பு கிடைத்தால் அந்தத் திகைப்பு வானளவு இருக்கும்,” எனப் பதிலளித்துள்ளார் பிரசன்னா.
உங்கள் வாழ்க்கையில் மிகச்சிறந்த தருணம்?
“இரண்டு தருணங்கள் உள்ளன. விஹான் பிறக்கும்போது, ஆத்யந்தா பிறக்கும்போது என் கைகளில் அவர்களைக் கொடுத்த தருணங்கள்தான் அவை,” என்கிறார் பிரசன்னா.
‘துப்பறிவாளன்-2’ படத்தில் பிரசன்னா மீண்டும் விஷாலுடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தின் மூலம் விஷால் இயக்குநர் அவதாரம் எடுக்கப் போகிறார்.
விஷாலும் தானும் நீண்டநாள் நண்பர்கள் என்று குறிப்பிடும் பிரசன்னா, இயக்குநராகும் தனது நண்பருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“பல வருடங்களாக ஒரு நல்ல நண்பராக விஷாலை எனக்குத் தெரியும். இன்னும் அவரை இயக்குநராகப் பார்க்கவில்லை. அவருக்கு என் வாழ்த்துகள். “அவர் கடின உழைப்பாளி. எனவே இயக்குநராகவும் அவர் வெற்றி பெறுவார் என நம்புகிறேன்.”
சினேகாவும் பல படங்களில் நடிக்க இருப்பதாகத் தெரிகிறதே?
“அவர் எனக்கு அனைத்து வகையிலும் பக்கபலமாக உள்ளார். அவரது திறமைக்கேற்ற வாய்ப்புகள் அமையும்போது நடிக்க முன்வருகிறார். இருவரும் நன்கு திட்டமிட்டு எந்தப் பிரச்சினையும் ஏற்படாத வகையில் திரையுலகப் பணிகளை மேற்கொள்கிறோம்.
“அந்த வகையில் மனநிறைவுடன் செயல்பட முடிகிறது.
“அஜீத், விஜய் ஆகியோருடன் திரையில் மோதத் தயார்,” என்கிறார்
பிரசன்னா.