நாயகியாக சில படங்களில் நடித்துள்ள போதிலும், ‘காலா’வில் ரஜினியின் மருமகளாக நடித்தது கூடுதல் மகிழ்ச்சியை அளித்ததாகச் சொல்கிறார் ‘பிக்பாஸ்’ புகழ் சாக்ஷி அகர்வால்.
‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி கூடுதல் வெளிச்சம் தந்துள்ளது என்றாலும், பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது சிறையில் பொழுதைக் கழித்தது போன்ற உணர்வுதான் ஏற்பட்டதாகச் சொல்கிறார்.
தற்போது ஜி.வி.பிரகாஷுடன் ‘ஆயிரம் ஜென்மங்கள்’, ஆர்யாவுடன் ‘டெடி’ என சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கி றாராம்.
பல சிறு முதலீட்டுப் படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தாலும் ரசிகர்கள் இப்போதுதான் தம்மை நன்கு அடையாளம் கண்டு கொள்வதாகச் சொல்லும் சாக்ஷி, தற்போது தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
புதுப்படம் ஒன்றில் ஏற்றுள்ள முக்கிய கதாபாத்திரத்துக்காகவே இந்த மெனக்கெடல் எனத் தகவல். அந்தப் படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
“உண்மையில் ‘காலா’தான் எனக்கு பளிச்சென்று அடையாளத்தைக் கொடுத்தது. ரஜினி சாரின் மருமகளாகச் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் அது தந்திருக்கும் புகழுக்கு எதுவும் இணையில்லை,” என்கிறார் சாக்ஷி.
‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி தமக்கு மிகச் சிறந்த பாடங்களைக் கற்றுக்கொடுத்ததாகக் குறிப்பிடுபவர், பிக்பாஸ் வீட்டில் தாம் நிறைய விட்டுக்கொடுக்க வேண்டியிருந்ததாகச் சொல்கிறார்.
“நானும் என் தங்கைகளும் வீட்டில் செல்லப்பெண்களாகச் செல்வாக்குடன் வளையவருபவர்கள். வீட்டில் நமக்கு கேட்டது கிடைக்கும். அம்மா, அப்பாபோல் பாதுகாப்பு வளையமாக உலகில் யாருமே இருக்க முடியாது.
“ஆனால், பிக்பாஸ் வீட்டுக்குள் தொலைபேசி கிடையாது. வெளியுலகுடன் தொடர்பு கிடையாது என்ற நிபந்தனைகளை ஒப்புக்கொண்டு போய்விட்டாலும் மூன்றாவது நாளில் இருந்து மன அழுத்தம் உருவாகிவிட்டது. நிறைய விட்டுக்கொடுக்க வேண்டியிருந்தது. நிறைய எச்சரிக்கையாக இருக்க வேண்டியிருந்தது,” என்கிறார் சாக்ஷி.
விதவிதமான மனிதர்களை முதல்முறையாக ஒரு பூட்டிய வீட்டுக்குள் சந்தித்தபோது அவர்கள் எப்படி நடந்துகொள்வார்கள் என்பதை காண முடிந்ததாகக் குறிப்பிடுபவர், பிக்பாஸ் வீட்டில் தாம் அனுபவித்த நெருக்கடிகள் கொஞ்சநஞ்சமல்ல என அங்கலாய்க்கிறார். “அங்கே இருந்த 70 நாட்களும் சிறையில் இருந்ததுபோன்ற உணர்வுதான். மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்வீர்களா என்று கேட்டால், நிச்சயமாகப் போகமாட்டேன் என்பதுதான் எனது பதில்,” என்கிறார் சாக்ஷி.
‘காலா’ படப்பிடிப்பின்போது இவருக்குப் பிறந்தநாள் என்பதை அறிந்து பெரிய கேக் வாங்கி வரச்செய்து, வாழ்த்து தெரிவித்தாராம் ரஜினி.
அதேபோல் நடிகர் அஜீத் ‘விஸ்வாசம்’ படப்பிடிப்பின் போது சாக்ஷிக்கு மிகவும் பிடித்தமான இனிப்பு ஒன்றை தாமே தயாரித்து பரிமாறினாராம்.