விஜய் சேதுபதியை வைத்துப் படம் இயக்க காத்திருக்கிறார் இயக்குநர் சேரன். எனினும் காலம் அதற்கு வழிவிடுமா எனத் தெரியவில்லை என்று அண்மைய டுவிட்டர் பதிவில் அவர் கவலை தெரிவித்துள்ளார்.
‘திருமணம்’ படத்தை அடுத்து தமது அடுத்த படைப்புக்காக தயாராகி வந்தார் சேரன். அதற்கான கதையைப் பல முன்னணி நடிகர்களிடம் கூறுவதற்கு அவர் நேரம் கேட்டும் யாரும் அதற்கு முன்வரவில்லை.
பலரும் தம்மை அலட்சியப்படுத்தியதாக வேதனை தெரிவித்திருந்தார். மேலும் அவருக்குப் பணப்பிரச்சினையும் அதிகமாக இருந்தது.
இந்நிலையில் சேரனின் இக்கட்டான நிலை குறித்து கேள்விப்பட்ட விஜய் சேதுபதி அவரது இயக்கத்தில் நடிக்க தாமாக முன்வந்து கால்ஷீட் ஒதுக்கியுள்ளார். இதையடுத்து சேதுபதியின் இந்த உதவியைத் தம்மால் வாழ்நாள் முழுவதும் மறக்க இயலாது எனக் கூறிவந்தார் சேரன்.
இடையில் சேதுபதியின் அறிவுரையை ஏற்றே ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் தாம் பங்கேற்றதாகவும் அவர் தெரிவித்தார். சேதுபதி-சேரன் கூட்டணியில் புதுப்படத்துக்கான பணிகள் சூட்டோடு சூடாகத் துவங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதுவரை அப்படி எதுவும் நடக்கவில்லை.
இந்நிலையில் சேரன் இயக்கிய ‘தவமாய் தவமிருந்து’ படத்தைப் பார்த்துவிட்டு ரசிகர் ஒருவர் டுவிட்டரில் வெகுவாகப் பாராட்டியுள்ளார். இதற்கு சேரன் பதிலளித்துள்ளார்.
“’தவமாய் தவமிருந்து’ போன்ற ஒரு படைப்பாகத்தான் விஜய் சேதுபதியுடன் இணையும் படத்துக்காக முடித்து வைத்திருக்கும் திரைக்கதை அமைந்துள்ளது. ஆனால், ஏனோ அதைச் செய்துமுடிக்க இயலாமல் தள்ளிக்கொண்டே போகிறது. இது அண்ணன்களும் தங்கைகளும் கண்ணுக்குள் வைத்து பாதுகாக்கப்போகும் படம். வழிவிடுமா காலம்?” எனத் தமது பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார் சேரன்.