இன்றைய சூழ்நிலையில் மனிதர்களாக இருப்பதுதான் பாதுகாப்பின்மை என்கிறார் இளம் நாயகி ராஷ்மிகா மந்தனா.
இவரைப் பற்றி நாள்தோறும் ஏதேனும் ஒரு தகவல் தெலுங்கு ஊடகங்களில் வெளியாகிறது. ராஷ்மிகாவும் விடாமல் ஊடகங்களுக்குத் தீனி போட்டு வருகிறார்.
இந்நிலையில் கொரோனா கிருமி விவகாரத்தால் பலரும் பாதுகாப்பற்ற சூழ்நிலையை உணர்வதாக கூறி வருவதைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், திரையுலகில் தாம் எதிர்கொண்ட பாதுகாப்பற்ற சூழல் குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
“பாதுகாப்பின்மை என்றால் நிச்சயமற்ற தன்மை அல்லது அதிக ஏக்கத்துடன் இருப்பது என்று பொருளாம். இதை நான் சொல்லவில்லை.கூகளில் இப்படித்தான் பாதுகாப்பின்மை எனும் வார்த்தைக்கான அர்த்தத்தை விவரிக்கிறார்கள்.
“என்னைக் கேட்டால் ஒரு படி மேலே சென்று மனிதனாக இருப்பதுதான் பாதுகாப்பின்மை என்பேன். இன்றைய தேதியில் நாம் பல விஷயங்கள் குறித்துப் பேசுகிறோம். பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாகச் சொல்கிறோம்.
“நம்மைப் பற்றியோ அல்லது பிறரைப் பற்றியோ அல்லது ஏதேனும் மோசமான விஷயம் குறித்தோ யோசிக்கும்போது ஒருவித பாதுகாப்பற்ற தன்மையை உணர்கிறோம்.
“எனினும் ஒரு கட்டத்துக்குப் பிறகு நாம் யோசிப்பது, தூங்குவது, செயல்படுவது உள்ளிட்ட அனைத்துமே அர்த்தமற்றதாகத் தோன்றும்,” என்கிறார் ராஷ்மிகா.
சிலர் நம்மைப் பற்றி சாதாரணமாக விசாரித்தாலும்கூட நாம் அதுகுறித்து அதிகம் யோசிப்பதாக குறிப்பிடுபவர், சிறு விஷயங்கள் குறித்து தேவையின்றி யோசித்து பாதுகாப்பற்ற சூழ்நிலையில் இருப்பதாக நமக்கு நாமே கற்பனை செய்வது தேவைதானா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கான உதாரணங்களையும் அவர் தமது இன்ஸ்டகிராம் பதிவில் விவரித்துள்ளார்.
“எனது உடல் எடை கூடிவிட்டதா? ஒல்லியாகத் தெரிகிறேனா, எனது சருமம் (தோல்) வறண்டுவிட்டதா அல்லது அதிக எண்ணெய்த் தன்மையுடன் இருக்கிறதா என்றெல்லாம் நமக்கு நாமே பலவிதமாக கேள்விகளை எழுப்பிக் கொள்கிறோம்.
“யாரேனும் ஒருவர் நீண்ட நாட்களுக்குப் பிறகு நம்மைச் சந்திக்கும்போது, ‘உன் முகத்துக்கு என்ன ஆயிற்று?’ என்று கேட்டால், அத்தோடு முடிந்தது கதை.
“பத்து நாட்களுக்கு முக்காடு போட்டுக் கொள்கிறோம். என்னைப் பொறுத்தவரை இதெல்லாம் தேவையற்றது,” என்கிறார் ராஷ்மிகா மந்தனா.
கொரோனா ஊரடங்கு வேளையில் தானும் பாதுகாப்பற்ற தன்மையை உணர்வதாக குறிப்பிடுபவர் வேலை, திரையுலகப் பணி, புறத்தோற்றம், மன ஆரோக்கியம் என அனைத்து விஷயங்கள் குறித்த கவலைகள் தமக்கும் இருப்பதாகச் சொல்கிறார்.
“எனவே நம்மால் கட்டுப்படுத்தக்கூடிய விஷயங்களைப் பற்றி மட்டும் கவலைப்படுவோம். நமக்கு இருக்கும் பாதுகாப்பற்ற தன்மையை நமது பலமாக மாற்றிக் கொள்வோம்.
“நீங்கள் கறுப்பாக இருக்கிறீர்கள். ஒல்லியாக இருக்கிறீர்கள். உங்கள் கண்கள் பெரிதாக இருக்கின்றன என யாராவது கூறினால் அதை சரி என்று எடுத்துக் கொள்ளுங்கள்.
“உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். நம்மை நாமே நம்பாவிட்டால் வேறு யார் நம்புவார்கள். இறுதிவரை போராடுங்கள்,” என்று ராஷ்மிகா மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தன்னம்பிக்கை இழந்து கவலையில் இருக்கும் பலருக்கும் ராஷ்மிகாவின் இந்தப் பதிவு நம்பிக்கையூட்டி இருப்பதாக பலரும் பாராட்டியுள்ளனர்.
அதுமட்டுமல்ல, சக நடிகைகள் சிலரும் கூட கச்சிதமான பதிவு என்று கருத்து தெரிவித்தனராம். இதே போல் மேலும் சில நடிகைகள் சமூக வலைத்தளங்களில் நம்பிக்கையூட்டும் வகையில் பதிவிட்டு வருகின்றனர். இவற்றுக்கு எதிர் கருத்துகளும் எழுகின்றன. இருந்தபோதிலும் திரைக் கலைஞர்கள் அவற்றைக் கண்டு கொள்வதில்லை.