திரையுலகத்தினர் ஏழை எளியவர்களுக்குச் செய்துவரும் உதவிகள், அவர்களுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் வெளியிடும் பதிவுகள் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன.
இந்நிலையில் நடிகை பிரணிதா தினமும் ஒரு லட்சம் பேருக்கு உணவளிக்கும் நல்ல காரியத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.
இவர் ஏற்கெனவே தன் பெயரில் அறக்கட்டளை ஒன்றைத் துவங்கி ஆதரவற்றவர்களுக்கும் ஏழைகளுக்கும் உதவி செய்து வருகிறார் என்பது தெரிந்த விஷயம்தான். ஆனால், தொடக்கத்தில் 100, 200 பேருக்கு உணவளித்த நிலை மாறி தற்போது ஒரு லட்சம் பேருக்கு இவரது உதவிக்கரம் நீண்டுள்ளது.
பிரணிதாவின் பெற்றோர் இருவருமே மருத்துவர்கள் என்பதால் மகள் சினிமாவில் நடிப்பதில் இருவருக்குமே உடன்பாடு இல்லையாம். நடிக்க வேண்டாம் என்று குடும்பத்தார் வலியுறுத்தியும்கூட எப்படியோ சமாளித்து திரையில் முகம் காட்டியுள்ளார்.
ஆனால், முதல் படத்தில் நடித்து முடித்ததுமே நிலைமை மாறிவிட்டதாம். அதன்பிறகு எந்தச் சிக்கலுமின்றி இவரது திரைப்பயணம் சென்று கொண்டிருக்கிறது.
“கன்னடத்தில் நான் நடித்த முதல் படம் தமிழில் வெளியான ‘போக்கிரி’யின் மறுபதிப்பு. தமிழில் அசின் நடித்த கதாபாத்திரத்தை நான் ஏற்றிருந்தேன். அதன்பிறகு தமிழ், தெலுங்கு என்று பல படங்களில் நடித்தாகி விட்டது.
“இந்தியில் நான் நடித்த ‘The Pride of India’ படம் ஆகஸ்ட் மாதம் வெளியாக இருந்தது. ஆனால், ஊரடங்கு காரணமாக அது சாத்தியமாகவில்லை,” என்று வருத்தத்துடன் குறிப்பிடும் பிரணிதா மேலும் ஒரு இந்திப் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். அதை பிரியதர்ஷன் இயக்குகிறாராம்.
ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகு வீட்டிலேயே முடங்கிக் கிடப்பது ஒருவகையில் எரிச்சல் ஊட்டியதாம். மேலும் வருமானமின்றி ஆயிரக்கணக்கானோர் சிரமப்படுவதை நினைத்தபோது வருத்தமாகவும் இருந்ததாம். இதனால் அவர்களுக்கு உதவும் வகையில் ஏதாவது செய்யவேண்டும் என்று நினைத்ததாகச் சொல்கிறார் பிரணிதா.
“ஏதோ நம்மால் முடிந்த உதவியைச் செய்வோம் என்று நினைத்து துவங்கியது இன்று அதிக பொறுப்புகளைக் கொடுத்திருக்கிறது. தினமும் ஒரு லட்சம் பேருக்கு உணவுப் பொருட்கள், உணவு கொடுத்து வருகிறோம்.
“எனது பெயரிலான அறக்கட்டளை மூலம் நிறைய நல்ல விஷயங்கள் நடந்து வருகின்றன. கடந்தாண்டு கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டபோது அறக்கட்டளை சார்பாக ஒரு குழு அங்கு நேரில் சென்று உதவி மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொண்டது.
“பெற்றோர் இருவருமே மருத்துவர்கள் என்பதால் குடிசைவாழ் பகுதி மக்களுக்காக கிராமப்புறங்களில், குடிசைப் பகுதிகளில் மருத்துவ முகாம் நடத்தினோம்.
“அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு நான் ஆங்கிலம் கற்பிக்கும் வகுப்புகளை நடத்தினேன். குறிப்பாக ஆட்டோ ஓட்டும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு அனைத்து வகையிலும் உதவி செய்து வருகிறோம்,” என்று சொல்லும் பிரணிதா, தனது அறக்கட்டளையின் வெற்றிகரமான செயல்பாட்டிற்கு தாம் மட்டுமே காரணம் என்று சொல்ல முடியாது என தன்னடக்கத்தோடு குறிப்பிடுகிறார். பலரும் இவரது அறக்கட்டளைக்கு நிதியளித்து வருவதாகவும் அவற்றைக் கொண்டே ஏழைகளுக்கு உதவ முடிவதாகவும் கூறுகிறார்.
“மருத்துவ உதவிகள் ஏழைகளுக்கு மிக அவசியம். அதில் கூடுதல் கவனம் செலுத்துகிறோம். பேரிடர் போன்ற சமயங்களில் நாம் ஒவ்வொருவரும் இயன்ற வகையில் பிறருக்கு உதவ வேண்டும். இப்படிப்பட்ட உதவிகள்தான் வாழ்க்கையில் நம்மை உயர்த்தும். படப்பிடிப்புகள் துவங்கி மீண்டும் பரபரப்பாக இயங்கினாலும் எனது இந்த சமூக சேவைகள் தொடரும்,” என்கிறார் பிரணிதா.