எப்படி உங்களால் வீட்டில் அமைதியாக முடங்கிக் கிடக்க முடிகிறது?
அண்மைய சில வாரங்களாக டாப்சியுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசும் அனைவரும் தவறாமல் கேட்கக்கூடிய கேள்வி இதுதானாம். அனைவருக்கும் பொறுமையாக பதில் சொல்லிக் கொண்டிருக்கும் டாப்சி தமக்கும்கூட இவ்வாறு இருப்பது ஆச்சரியம் அளிப்பதாக சொல்கிறார்.
“கடந்த இரு ஆண்டுகளாக காலில் இறக்கை கட்டிக்கொண்டு பறக்காத குறைதான். ஆண்டுக்கு நான்கைந்து படங்களில் நடித்து முடித்திருக்கிறேன். ஒருவேளை இந்த ஆண்டும் எல்லாம் திட்டமிட்டபடி நடந்திருக்குமானால் ஆறேழு படங்களில் நடித்து முடித்திருக்க வாய்ப்புண்டு.
கொரோனா கிருமித் தொற்று எல்லாவற்றையும் மாற்றியமைத்து விட்டது,” என்கிறார் டாப்சி.
நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டபோது எப்படி சமாளிக்கப் போகிறோம் என்று முதலில் யோசித்தாராம். இப்போதெல்லாம் தினமும் ஒன்பது மணி நேரங்களுக்கு குறையாமல் தூங்குகிறாராம்.
கைவசம் ஐந்து இந்திப் படங்களை வைத்துள்ளார் டாப்சி. தவிர ஜெயம் ரவி ஜோடியாக தமிழிலும் ஒரு படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார். ஊரடங்கு முடிவுக்கு வந்ததும் எப்படி, யாருக்கு கால்ஷீட் கொடுப்பது எனும் குழப்பம் இப்போதே தலைதூக்கிவிட்டதாம்.
கவர்ச்சி நாயகியாக அறியப்பட்ட டாப்சியை திறமையான நடிகை என்று பெயர் வாங்க வைத்தது ‘பேபி’ திரைப்படம்தான்.
“தென்னிந்திய மொழிகளில் பல படங்கள் நடித்திருக்கிறேன். குறிப்பாக தெலுங்கில் நான் கவர்ச்சி நாயகியாகவே அறியப்பட்டேன். தொடக்கத்தில் பெரிய நாயகியாக வேண்டும் என்றால் இதுதான் சரியான பாதை என்று நினைத்திருந்தேன். பிறகுதான் நான் நினைப்பதைச் சாதிக்க இந்த வழி உதவாது என்பதை உணரமுடிந்தது.
“பாதையை மாற்றத் தீர்மானித்த போதுதான் ‘பேபி’ பட வாய்ப்பு கிடைத்தது. சிறிய கதாபாத்திரம் என்றாலும் ரசிகர்கள் என்னை வித்தியாசமான முறையில் நினைவில் வைத்திருக்க முடியும் என்று தோன்றியதால் அதில் நடித்தேன்,” என்கிறார் டாப்சி.
அதன்பிறகு ‘பிங்க்’ முதல் அண்மைய வெளியீடான ‘தப்பட்’ வரை டாப்சி ஏற்று நடித்த ஒவ்வொரு கதாபாத்திரமும் ரசிகர்களால் உன்னிப்பாகக் கவனித்துப் பேசப்பட்டன.
உங்களைப் பற்றிய விமர்சனங்களை எப்படி எதிர்கொள்வீர்கள்?
“விமர்சனங்கள் என்று வரும்போது கலவையான கருத்துகள் இருக்கவே செய்யும். என்னைப் பொறுத்தவரை அனைத்தையும் நேர்மறை சிந்தனையுடன் அணுகுகிறேன். நான் யாரையும் மாற்ற முயற்சிக்கவில்லை. நான் நடிக்கும் படங்களும் கதாபாத்திரங்களும் ஒரு கலந்துரையாடலைத் துவக்கி வைக்க வேண்டும் என்பது மட்டுமே எனது விருப்பம். அதைத்தான் செய்துவருகிறேன்.
“மாற்றம் என்பது இயல்பாக வரவேண்டும். பொதுவாக நான் அதிகப்படியான சுறுசுறுப்புடன் அமைதியற்றுக் காணப்படுவேன். ஆனால் இந்த ஊரடங்கு என்னை மாற்றியுள்ளது. என்னிடம் காணப்படும் அமைதி என்னையே ஆச்சரியப்பட வைத்துள்ளது. விமர்சனங்கள் இருப்பது எப்போதுமே நல்லது,” என்கிறார் டாப்சி.
இந்த ஊரடங்கு வேளையில் ரசிகர்களுக்கு என்ன அறிவுறுத்த விரும்புகிறீர்கள்?
“நாம் நாளை என்ன நடக்கும் என்பதைப் பற்றி யோசிப்பதில் பலனில்லை. ஒவ்வொரு நாளையும் நாம் எதிர்கொள்ள வேண்டும்.
“நம்மைச் சுற்றி நடப்பதை நாம் கட்டுப்படுத்த முடியாது. அப்படி இருக்கும்போது எதற்காக மற்ற விஷயங்களை நினைத்து அச்சமோ கோபமோ கொள்ள வேண்டும்? எதற்காக மன அழுத்தத்துக்கு ஆளாகவேண்டும்?
“இன்று நம்மிடம் என்ன இருக்கிறதோ அதை வைத்து இன்றைய பொழுதைக் கடத்தவேண்டும். சுருக்கமாகச் சொன்னால், இன்றைய வாழ்க்கை நம் கையில் உள்ளது. அதைச் சிறப்பாக வாழ வேண்டும்,” என்கிறார் டாப்சி.