‘தீர்ப்புகள் விற்கப்படும்’ என்ற தலைப்புடன் கோடம்பாக்கத்தில் களம் இறங்கியுள்ளார் அறிமுக இயக்குநர் தீரன். இதில் சத்யராஜ் கதாநாயகனாக நடிக்கிறார்.
தீரனைச் சந்திக்கும் பலரும் இப்படியொரு தலைப்பை வைத்திருக்கிறீர்களே என்று கேட்கிறார்களாம். அவரோ, இதுபோன்ற தலைப்புகள் தமிழ் சினிமாவுக்கு ஒன்றும் புதிதில்லையே என்று பதில் கேள்வி எழுப்புகிறார்.
“சத்யராஜ் சார் ஏற்கெனவே ‘தீர்ப்புகள் திருத்தப்படலாம்’ என்ற தலைப்பில் நடித்திருக்கிறார். கடந்த 1980களில் ‘நீதிக்குத் தண்டனை’, ‘சட்டம் ஒரு இருட்டறை’ என்ற தலைப்புகளில் படங்கள் வந்துள்ளன. அப்போதெல்லாம் படத்தின் தலைப்பே அதில் பேசப்பட்டிருக்கும் விஷயத்தைச் சுட்டிக்காட்டும். ஆனால், எனது படத்தில் பேசப்படும் விஷயம் இன்னும் சற்று தீவிரமானது,” என்கிறார் தீரன்.
இந்தப் படமும் நீதியைப் பற்றித்தான் பேசுகிறது என்றாலும் அதிலும் ஒரு சின்ன மாற்றம் இருப்பதாக குறிப்பிடுபவர், தனது படம் நீதி கேட்டு நீதிமன்றத்துக்குச் செல்வதற்கு முன் உள்ள விஷயங்களைப் பேசும் என்கிறார்.
ஒருவகையில் மருத்துவம் சார்ந்த குற்றங்கள் தொடர்பான திகில் படம் என்றுகூட குறிப்பிடலாம். இந்தியத் தலைநகர் டெல்லியில் சில காட்டுமிராண்டிகளால் கசக்கி எறியப்பட்ட மலரான நிர்பயாவின் வழக்குதான் இந்தக் கதைக்கான உந்துதல் என்கிறார்.
கதைப்படி சத்யராஜ் நேர்மையான அரசு மருத்துவர். அவரது மகள் மருத்துவ மாணவி. திடீரென அவருக்கு மிகப்பெரிய பாலியல் கொடூரம் நடக்கிறது. ஒரு மருத்துவக் குடும்பத்துக்கு நடக்கும் அநீதிக்குக்கூட அவர்கள் உரிய நீதியைப் பெற எத்தகைய போராட்டத்தை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது என்பதுதான் இப்படத்தின் கதை. இது நான்கு மணி நேரத்தில் நடக்கும் ஒரு பழிவாங்கல் கதை என்கிறார் தீரன்.