தெலுங்கு முன்னணி நடிகர் மகேஷ்பாபு விடுத்த பசுமை சவாலை ஏற்று மரக்கன்று நட்டுள்ளார் விஜய்.
சமூக வலைத்தளங்கள் மூலம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பிரபலங்கள் சிலர் அவ்வப்போது புதுப்புது கருப்பொருளுடன் கூடிய சவால்களை விடுப்பது வழக்கமாகி உள்ளது.
அந்த வகையில் பசுமை சவால் (Green Challenge) தற்போது பிரபலமாகி உள்ளது.
இந்தச் சவாலை விடுக்கும் ஒருவர், தன் பங்குக்கு மரக்கன்றுகளை நடவேண்டும். பிறகு தன்னைப்போல் இந்தச் சவாலை ஏற்கமுடியுமா என்று மூன்று பேருக்கு அவர் அழைப்பு விடுக்கவேண்டும்.
நடிகர் மகேஷ்பாபு அண்மையில் நடிகர் விஜய், தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர், நடிகை ஷ்ருதிஹாசன் ஆகிய மூவருக்கும் சவால் விடுத்தார்.
இதை ஏற்று விஜய் சில மரக்கன்றுகளை நட்டதுடன் ‘இது உங்களுக்காக மகேஷ் காரு’ என்று டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தாம் மரக்கன்று நடும் புகைப்படத்தையும் காணொளிப் பதிவையும் அவர் வெளியிட்டுள்ளார். விஜய் ரசிகர்கள் இதை உற்சாகத்துடன் பரவலாகப் பகிர்ந்து வருகின்றனர். நடிகர்கள் பிரபாஸ், நாகார்ஜுனா, நடிகைகள் சமந்தா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் இந்தச் சவாலை ஏற்று மரக்கன்றுகளை நட்டுள்ளனர்.
இதற்கிடையே ‘மாஸ்டர்’ படத்தில் இடம்பெறும் ‘க்விட் பண்ணுடா’ என்ற பாடலை சுதந்திர தினமான 15ஆம் தேதியன்று வெளியிட அப்படக்குழு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால் ரசிகர்கள் மேலும் உற்சாகம் அடைந்துள்ளனர்.