அண்மையில் இணையத்தொடர் ஒன்றில் முத்தக் காட்சியில் நடித்துள்ளார் நித்யா மேனன். அது பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.
இப்படிப்பட்ட காட்சிகள் எல்லாம் தேவையா? என சமூக வலைத்தளங்களில் விமர்சனம் எழுந்துள்ள நிலையில், அந்தத் தொடரைப் பார்க்காமலேயே நித்யாவைக் குறை கூறுவது நியாயமல்ல என்கிறது அவரது தரப்பு.
இதற்கு முன்பும் சினிமாவில் முத்தக் காட்சியில் நடித்துள்ளார் நித்யா.
“தற்போது திரையுலகில் எத்தகைய சவாலான வேடமாக இருந்தாலும் அதை துணிச்சலாக ஏற்று நடிப்பது நித்யா மேனன், அமலா பால் போன்ற சில நடிகைகள்தான்.
“எனவே வீண் விமர்சனங்கள் குறித்து நித்யா கவலைப்படமாட்டார்,” என்கிறது அவரது தரப்பு.
கொரோனா கிருமித்தொற்று அனைத்துத் துறைகளையும் பாதித்துள்ளது. கோடிக் கணக்கானோரைப் புலம்ப வைத்திருக்கிறது.
இந்நிலையில் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் கொரோனா கிருமி புரட்டிப் போட்டுள்ளதாகச் சொல்கிறார் நடிகை நித்யா மேனன்.
தற்போது வாழ்க்கை போராட்டக் களமாக மாறியுள்ளது என்றும் அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அன்றாட உணவுக்குக் கூட வழியின்றி மக்கள் போராடுவதை கண்கூடாகப் பார்க்க முடிகிறது என்றும் இத்தகைய விஷயங்கள் மனதை பாதிக்கின்றன என்றும் நித்யா கூறியுள்ளார்.
“எங்களை போன்றவர்கள் வேலை இல்லாமல் வீட்டில் இருந்து போராடுகிறோம். ஆதரவற்றவர்கள் ஏதும் செய்ய இயலாமல் தவிக்கின்றனர்.
“இந்த உலகில் எல்லாருமே ஏதேனும் ஒருவகையில் கொரோனா கிருமித்தொற்றை எதிர்த்து போராடிக் கொண்டுதான் இருக்கிறோம்,” என்கிறார் நித்யா.
ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே முடங்கிக் கிடப்பது சலிப்பை ஏற்படுத்துவது இயல்புதான் என்று குறிப்பிட்டுள்ள அவர், அதையும் மீறி இப்போது கிடைத்துள்ள ஓய்வு நேரத்தை பயனுள்ளதாக மாற்றிக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகிறார்.
“இந்த ஓய்வு நேரத்தை நம்மைப் பற்றி நாமே தெரிந்துகொள்ள பயன்படுத்தலாம்.
“குறிப்பாக நமது செயல்பாடுகளை எந்தவித பாரபட்சமும் இன்றி சுய விமர்சனம் செய்து பார்ப்போம். அதன் மூலம் நம்மிடம் உள்ள குறைகளைக் களையலாம்.
“அந்த வகையில் நான் மற்றவர்களுக்கு மட்டும் அறிவுரை சொல்லாமல், எனக்குள் இருக்கும் குறைகளைக் கண்டறிந்துள்ளேன். நிச்சயமாக அவற்றைப் போக்குவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வேன்,” என்கிறார் நித்யா.
காலஞ்சென்ற முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமாக உருவாகும் ‘தி அயர்ன் லேடி’ படத்தில் நடித்துக் கொண்டிருப்பவர், நிஜ வாழ்க்கையையும் சினிமாவையும் தாம் என்றுமே ஒன்றாகக் கருதியதில்லை என்கிறார்.
“என்னைப் பொறுத்தவரை சினிமா என்பது முற்றிலும் வேறுபட்ட தளம். படப்பிடிப்புக்குச் சென்றால் அங்குள்ள பணிகளை மட்டுமே கவனிப்பேன். அந்த வேலையை வீட்டுக்குள் சுமந்து வரமாட்டேன்.
“அதேபோல் படப்பிடிப்பு அரங்கில் அடியெடுத்து வைத்துவிட்டால் எனது சொந்த வாழ்க்கையில் உள்ள கஷ்ட நஷ்டங்கள் குறித்து யோசிக்க மாட்டேன். என் மனப் பாரத்தை தொழில் மீது சுமத்துவதில் எனக்கு விருப்பமில்லை,” என்று யதார்த்தமாகப் பேசுகிறார் நித்யா.
இதுவரை சினிமாவில் தாம் ஏற்று நடித்துள்ள கதாபாத்திரங்கள் சில விவரிக்க இயலாத தாக்கத்தை தம்மிடம் ஏற்படுத்தி உள்ளதாகக் குறிப்பிடுபவர், அத்தகைய சில கதாபாத்திரங்கள் இனம்புரியாத மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாகச் சொல்கிறார்.