‘புறம்போக்கு’ படம் வெளியாகி கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளாகி விட்டன. இப்போதுதான் அடுத்த படத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன்.
வழக்கம்போல் இதிலும் சமூக விவகாரங்களைத்தான் அலசியுள்ளார். விவசாயிகளின் பிரச்சினைகளையும் அதற்கான பின்னணி குறித்தும் அலசுகிறது இவரது புதிய படைப்பான ‘லாபம்’.
விவசாயிகள் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதாகக் கூறி பணம் சம்பாதிப்பதே திரைத்துறையினரின் வழக்கமாக உள்ளது என்று விமர்சிக்கப்படுவதை மறுக்கிறார் ஜனநாதன்.
குறைந்தபட்சம் தமக்கு அந்த நோக்கம் இல்லையென தெளிவுபடுத்துகிறார்.
“என்னை மட்டுமே முன்வைத்து விளக்கம் அளிக்கிறேன். லாபம் சம்பாதிப்பதற்கு என்னால் வேறு மாதிரியான படங்களை எடுக்க முடியும்.
“எனது பூர்வீகம் தஞ்சை மாவட்டமாக இருந்தாலும் சென்னையில்தான் வளர்ந்தேன். அதனால் விவசாயம் குறித்து எதுவுமே தெரியாது. சிறுவயது முதலே நிறைய திரைப்படங்கள் பார்த்து வருகிறேன்.
“சாதிச் சண்டை, பங்காளிச் சண்டை என்று பலவற்றைப் பற்றி சினிமாவில் பேசுகிறார்கள். ஆனால், விவசாயம் குறித்துப் பேசக்கூடிய படைப்புகள் அதிகமில்லை. விவசாயி சிரமப்படுகிறான் என்கிற ரீதியிலும் விவசாயிகளுக்கு அறிவுரை கூறும் வகையிலும்தான் படங்கள் வந்துள்ளன.
“ஆனால், இவற்றைக் கடந்து பேசுவதற்கு நிறைய விஷயங்கள் உள்ளன. இப்போது அதைத்தான் நான் செய்திருக்கிறேன்,” என்கிறார் ஜனநாதன்.
இந்த உலகத்துக்குத் தேவையான உணவு மட்டுமல்ல, பல விஷயங்கள் கிராமத்திலிருந்துதான் கிடைக்கிறது என்று சுட்டிக்காட்டு பவர், இப்படிப்பட்ட ஒரு படத்தை முன்பே இயக்கி இருக்கலாம் என்று தோன்றுவதாகச் சொல்கிறார். அதற்கான காரணத்தையும் விவரிக்கிறார்.
“காலையில் இருந்து கரும்பு வெட்டும் விவசாயி, வேலையை முடித்துவிட்டு உடல் வலியை மறப்பதற்காக மது அருந்துகிறார். ஆனால், அந்த மது கரும்பில் இருந்துதான் எடுக்கப்பட்டது என்பது அவருக்குத் தெரியாது. பருத்திக் கொட்டையில் இருந்துதான் வனஸ்பதி வருகிறது என்பது அதற்குப் பெயர் பெற்ற ராஜபாளையத்து மக்களுக்கே தெரியவில்லை.
“உணவு மட்டுமல்ல, உலகத்துக்குத் தேவையான எல்லா மூலப்பொருட்களும் கிராமத்திலிருந்துதான் வருகின்றன. ஆனால், இதையெல்லாம் கொடுக்கும் விவசாயிக்கு என்ன கிடைக்கிறது? இந்தக் கேள்வியைத்தான் ‘லாபம்’ படம் எழுப்புகிறது,” என்கிறார் ஜனநாதன்.
இதுவரை தாம் இயக்கிய படங்களின் முழுக்கதையையும் கதாநாயகர்களிடம் விவரித்ததில்லை என்று குறிப்பிடுபவர், படம் துவங்கும் வரை தமக்கே முழுக்கதையும் தெரியாது என்கிறார்.
படப்பிடிப்பு தொடங்கிவிட்ட பிறகும்கூட கதையை மெருகேற்றிக்கொண்டே இருப்பாராம்.
“இன்றைக்கு புதிதாகத் தோன்றும் விஷயம் படம் வெளியாகும்போது பழையதாகிவிடும். எனவேதான் எதையும் இறுதியானது என்று நான் வகைப்படுத்துவதில்லை. இதைப் புரிந்துகொண்டவர்கள்தான் என் படத்தின் நாயகர்களாக இருப்பார்கள். ஷாம், ஜீவா, ஜெயம் ரவி எல்லோருக்குமே அந்தப் புரிதல் இருந்தது. விஜய் சேதுபதியும் அப்படித்தான்,” என்று சொல்லும் ஜனநாதன், ‘லாபம்’ படத்தின் நாயகியாக ஷ்ருதிஹாசனை நடிக்க வைக்கும் எண்ணம் தமக்குத் தொடக்கத்தில் அறவே இல்லை என்கிறார்.
தயாரிப்பாளர் கேட்டுக்கொண்டதால்தான் ஷ்ருதியைச் சந்தித்து கதை சொன்னாராம்.
“உண்மையைச் சொல்லவேண்டுமானால் ஷ்ருதி நடிக்க ஒப்புக்கொள்வாரா எனும் சந்தேகம் இருந்தது. ஆனால் கதையைக் கேட்ட பிறகு நடிப்பதாகச் சொன்னார்.
“கதைப்படி அவருக்கு நடனக்கலைஞர் வேடம். கதை நாயகனின் தியாகத்தையும் அர்ப்பணிப்பையும் பார்த்து அவரைக் காதலிப்பார்,” என்கிறார் ஜனநாதன்.
‘லாபம்’ படத்தின் முன்னோட்டக் காட்சித் தொகுப்பில் இடம்பெற்றுள்ள வசனங்கள் அதிரடியாக இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
தன் மனதுக்கு நியாயம் என்று தோன்றிய கருத்துகளைத்தான் முன்வைத்திருப்பதாகச் சொல்கிறார் ஜனநாதன்.