‘ஆடை’ படத்துக்குப்பின் ஆளே மாறிப்போய்விட்டார் அமலா பால். வித்தியாசமான கதைக்களம், விதவிதமான கதாபாத்திரங்கள் என ‘மைனா’வின் மனசு தேடலில் தீவிரமாக இருந்து வருகிறது.
சொந்த வாழ்க்கையிலும் சுவாரசியமான விஷயங்களைத் தேடித்திரிகிறார்.
பாம்பு சட்டை உரிப்பதுபோல, தன் நட்சத்திர படிமத்தை உதறிவிட்டு, தோழமை வட்டத்துடன் மலையேற்றம், அடர் வனங்களில் கிடைக்கிற பொருட்களை உண்டு நாடோடி (ஜிப்ஸி) வாழ்க்கை மேற்கொள்வது என தீவிரமாகத்தான் இருக்கிறது அமலாவின் தேடல்.
சில ஆண்டுகளுக்கு முன்பே, இயற்கை மீது பற்றுகொண்டு, அதனை ஆழ்ந்து ரசித்து சிந்திக்கும் ஞானம் அமலாவுக்கு வந்துவிட்டதாம்.
‘திருட்டுப்பயலே-2’ படப்பிடிப்பிற்காக தாய்லாந்து சென்றிருந்த சமயம், ஒருநாள் சொல்லாமல் கொள்ளாமல் ஒரு சிறிய படகை வாடகைக்கு எடுத்துக்கொண்டு அடர்காடுகளின் வழியே பாய்ந்து செல்லும் பெருநதியில் சென்றிருக்கிறார்.
அது ஆபத்தான பகுதி, ஆபத்தான பயணம் என்பதறிந்து பதறிப்போய், படக்குழுவைச் சேர்ந்தவர்கள் அமலாவை மீட்டு வந்தார்கள்.
வாடிகன், இமயமலை, திருவண்ணாமலை, தியானம் என சமயங்களுக்கு அப்பாற்பட்டு அமைதியையும் அவ்வப்போது தேடிச் செல்கிறது இந்த ‘மைனா’வின் மனசு.
ஜீவகாருண்யத்தில் சிறந்தவர்களாகத்தான் இருக்கிறார்கள் செல்லப்பிராணிகளை வளர்க்கும் நடிகைகள். அதிலும் அமலா பால் ஒருபடி மேலேதான்.
தன் வீட்டில் நாயுடன் பூனை ஒன்றையும் வளர்த்து வருகிறார் அமலா. கேரளாவிலுள்ள தன் வீட்டில் அமலா ஓய்வெடுக்கச் செல்லும்போதெல்லாம் அவருடன் மட்டுமே இருக்கும் அந்தப் பூனை. அதை அமலா கொஞ்சும் அழகைப்பார்த்து ரசிக மனசுகள் பொறாமையில் தங்களுக்குள் மெல்லியதாய் ‘மியாவ்’ சத்தமே போடுகிறார்கள்.
எதையும் புதுமையாகச் செய்யும் அமலா, தாம் முதன்முதலாக தயாரிப்பாளராக (இணைத் தயாரிப்பாளர்) ஆகியிருக்கும் படத்தையும் வித்தியாசமாகத்தான் தேர்வு செய்திருக்கிறார். கடந்த ஏப்ரல் மாதம் படத்திற்கு பூசை போட்டாலும்கூட படப்பிடிப்பு இன்னும் முடியவில்லை. எனினும் படத்திற்கான முன் - பின் தயாரிப்புப் பணிகள் நடந்து கொண்டே இருக்கின்றன.
“என் கையில் இப்போது பணம் இல்லை. படத்தயாரிப்புக்காக முதலீடு செய்துவிட்டேன்,” என அண்மையில் சொல்லி இருந்தார் அமலா. காரணம், இது சிக்கனமாக எடுக்கக்கூடிய கதையம்சம் கொண்ட படமல்ல. செலவு பிடிக்கும் படம்.
படத்திற்குப் பெயர் ‘கேடவர்’. மலையாளத்தில் தயாரித்து சில மொழிகளில் மாற்றம் செய்யத் திட்டமாம்.
‘கேடவர்’ என்றால் ‘உயிரற்ற உடல்’ என்று பொருள். இதில் அமலா ’தடயவியல், நோயியல் நிபுணர் மருத்துவர் பத்ரா’ எனும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அமலாவுடன் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் அதுல்யா ரவி, ஹரீஷ் உத்தமன், ரமேஷ் கண்ணா, வினோத் இன்பராஜ் (ராட்சசன் புகழ்) மற்றும் சிலர் நடிக்கிறார்கள்.
கேரளாவின் காவல்துறையில் பணியாற்றிய, மிகவும் பிரபலமான தடய அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் உமா பத்தன் கடந்த ஆண்டு காலமானார்.
அவர் தனது பணிக்கால அனுபவங்களை வைத்து எழுதிய ‘ஒரு போலிஸ் சர்ஜனோடே ஓர்ம குறிப்புகள்’ என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டுதான் அமலா தயாரிக்கும் படம் எடுக்கப்பட்டு வருகிறது.
இதற்காக அந்தப் புத்தகத்தை பலமுறை முழுமையாகப் படித்ததுடன், அந்தப் பணியைப் பற்றிய மேலும் நுணுக்கமான அறிவைப் பெற ஒரு தடய அறுவை சிகிச்சை நிபுணரிடம் சில நாட்கள் பயிற்சியும் பெற்று கதாபாத்திரத்திற்கு தயாரானாராம்.
“எங்கள் நோக்கம் தெளிவாக உள்ளது. நல்ல கதை மற்றும் தயாரிப்பில் தரத்தை உயர்த்துவதற்கு இன்னும் பல படங்களில் இணைந்து பணியாற்றுவது என உறுதியாக உள்ளோம்.
“இயக்குநர் அனூப் பணிக்கர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் அபிலாஷ் பிள்ளை ஆகியோர் திரைக்கதையில் தங்கள் முழு உழைப்பை காட்டியுள்ளனர்.
“அவர்களின் முன் தயாரிப்பு முயற்சிகள் மூலம் குறித்த நேரத்தில் படப்பிடிப்பை முடித்து விடுவோம். படத்தில் நான் ஒரு புதிய தோற்றத்தில் தோன்றுவேன். ரசிகர்களுக்கு அது ஆச்சரியத்தை ஏற்படுத்தும்,” என நம்பிக்கை தெரிவித்துள்ளார் அமலா.
நடிகையாக இருந்து தயாரிப்பாளராக ஆகியிருக்கும் அமலா பால், அடுத்ததாக பெண்களின் மனநிலையை வைத்து ஒரு கதையை உருவாக்கி வருவதாகத் தகவல். இதற்காக உலகத்தில் பிரபலமான பெண்கள் சம்பந்தப்பட்ட புத்தகங்களை படித்துக்கொண்டிருக்கிறாராம்.