நடிகர் விஜய் தன் ரசிகர்களுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட ‘செல்ஃபி’ படம் புதிய சாதனை படைத்துள்ளது.
டுவிட்டரில் அதிகம் பேரால் பகிரப்பட்ட பதிவு என்பதே அந்தச் சாதனை. இதற்கு முன்பு இந்தி நடிகர் ஷாருக்கான் வெளியிட்ட ஒரு பதிவுதான் டுவிட்டரில் முதலிடத்தில் இருந்தது.
தற்போது அதைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு முதலிடம் பிடித்துள்ளது விஜய்யின் பதிவு.
‘மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது விஜய் வீட்டில் திடீரென வருமான வரித்துறை சோதனை நடந்தது. இதையடுத்து நெய்வேலியில் படப்பிடிப்பில் பங்கேற்றிருந்த அவரை வருமான வரித்துறை அதிகாரிகள் சென்னைக்கு வரவழைத்தனர். சோதனை முடிந்த பிறகே அவர் படப்பிடிப்பில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டார்.
இத்தகவல் வெளியானதை அடுத்து நெய்வேலியில் படப்பிடிப்பு நடந்த பகுதியில் ஏராளமானோர் கூடினர். இதையறிந்த விஜய், ரசிகர்களை நோக்கி கையசைத்து உற்சாகப்படுத்தியதுடன் அங்கிருந்த ஒரு பேருந்தின் மீது ஏறி நின்று ரசிகர்களுடன் ‘செல்ஃபி’ படம் எடுத்துக் கொண்டார்.
இதைப் பின்னர் அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார். அதை ரசிகர்கள் மட்டுமன்றி, பிரபலங்கள் பலரும் பகிர்ந்ததை அடுத்து இந்தப் புதிய சாதனை சாத்தியமாகி உள்ளது.