‘மாஸ்டர்’ படம் குறித்து தினமும் ஏதாவது ஒரு தகவல் வெளியான வண்ணம் உள்ளது.
ஆனால், அவற்றுள் பெரும்பாலான தகவல்கள் வெறும் வதந்திகளாகவே உள்ளன.
குறிப்பாக ‘மாஸ்டர்’ நேரடியாக இணையத்தில் வெளியாகும் என்ற தகவல் தொடர்ந்து உலா வருகிறது.
ஆனால், ரசிகர்கள் அதை நம்பவேண்டாம் என படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
‘மாஸ்டர்’ திரையரங்கில்தான் வெளியாகும் என்றும் இதில் எந்தவித மாற்றமும் இல்லை என்பதால் இதுதொடர்பான கேள்விகளை மீண்டும் தம்மிடம் எழுப்பவேண்டாம் என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
நேற்று முன்தினம் கோவையில் விஜய் நற்பணி இயக்கம் சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டார் லோகேஷ். அப்போது பேசிய அவர், திரையரங்குகள் மூடப்பட்டிருப்பதால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.
“திரையரங்குகள் திறக்கப்பட்டவுடன் ‘மாஸ்டர்’ வெளியாகும். இந்த நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் இல்லையென உறுதியாகச் சொல்லமுடியும்.
“திரையரங்குகள் திறக்கப்பட்டால்தான் பலரது வாழ்வாதாரங்கள் மீட்டெடுக்கப்படும். எனவே ‘மாஸ்டர்’ படத்தை இணையத்தில் நேரடியாக வெளியிடும் எண்ணமே இல்லை,” என லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, இணையம் வழி புதுப்படங்களை வெளியிட நடிகர் விஷ்ணு விஷால் ஆதரவு தெரிவித்துள்ளார்.
மாற்றங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவற்றின் மூலம் புதியவற்றைக் கற்றுக்கொண்டு வளர்ச்சி காணவேண்டும் என்றும் அவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
‘மாஸ்டர்’ பட நிகழ்வில் விஜய், லோகேஷ் கனகராஜ்.