உடல் மெலிந்து பழைய தோற்றத்துடன் மீண்டும் களம் இறங்கியுள்ள சிம்புவுக்கு ரசிகர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ரசிகை ஒருவர் எழுதிய கடிதம் சிம்புவைக் கண்கலங்க வைத்த தகவல் தெரியவந்துள்ளது.
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த அந்த ரசிகை தற்போது தொண்டைவலி, தலைவலி மற்றும் காய்ச்சலால் தாம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தம்மால் விரிவாக பதிவிட முடியவில்லை என்றும் சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வாழ்க்கை நிலையில்லாதது என்றும் அடுத்து என்ன நடக்கும் என்பதும் கடவுள் கையில்தான் உள்ளது என்றும் உருக்கத்துடன் குறிப்பிட்டுள்ள அந்த ரசிகை, சிம்புவுக்காக மட்டுமே ஒரு குறுஞ்செய்தியைப் பதிவிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
“நீங்கள் மீண்டும் சமூக வலைத்தளத்திற்கு வந்திருப்பது எங்களைப் போன்றோருக்கு மனநிறைவைத் தந்துள்ளது. உங்களுடைய புதுப்படத்தின் சுவரொட்டிகள் மெய்சிலிர்க்க வைத்தன. அதைப் பார்த்த எனக்கு பேச்சே வரவில்லை. என் வாழ்க்கையில் நீங்கள் மட்டும்தான் உத்வேகம் அளிக்கிறீர்கள்.
“உங்களுடைய வசனங்கள், பாடல்கள், படங்கள் மூலம் எனக்கு நம்பிக்கை, அன்பு, உற்சாகம் அளிப்பதற்கு நன்றி. நீங்கள் சிறந்தவர்,” என்று அந்த ரசிகை அப்பதிவில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கடிதத்தைப் பார்த்து சிம்பு கண்கலங்கி விட்டதாகத் தெரிவித்துள்ளார் அவரது நெருங்கிய நண்பரும் நடிகருமான மகத்.
இதற்கிடையே சிம்புவுக்கு ஏற்ற வரனைத் தேடி வருவதாக அவரது பெற்றோர் அண்மையில் தெரிவித்திருந்தனர். ஆனால் அவரோ மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த விரும்புவதாகக் கூறிவிட்டாராம்.
தற்போது நடிக்க ஒப்புக்கொண்டுள்ள ‘ஈஸ்வரன்’, ‘மாநாடு’ உள்ளிட்ட படங்களை முடித்த பிறகே திருமணம் குறித்து அவர் யோசிப்பார் எனத் தெரிகிறது. ஹன்சிகா நாயகியாக நடிக்கும் ‘மஹா’ படத்திலும் சிறப்புத் தோற்றத்தில் தோன்றுகிறார் சிம்பு. அந்தப் படத்துக்கான படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.
“அடுத்தாண்டு ‘மாநாடு’ படத்துக்காக மலேசியா செல்ல அப்படக்குழு திட்டமிட்டுள்ளது. அப்படத்தில் அரசியல் நெடி அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காகவும் சிம்பு தயாராகிறார்,” என்கிறார்கள் கோடம்பாக்கத்து விவரப் புள்ளிகள்.