எப்போதும் கைவசம் அரை டஜன் படங்களையாவது வைத்திருக்கிறார் ஜி.வி. பிரகாஷ். வசந்தபாலன் இயக்கத்தில் இவர் நடித்துள்ள ‘ஜெயில்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இப்படத்துக்கு இசையமைப்பதும் இவர்தான்.
படம் விரைவில் வெளியீடு காணுமாம். இந்நிலையில் ‘பேச்சுலர்’ என்ற தலைப்பில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார் ஜி.வி. இது சதீஷ் செல்வகுமார் இயக்கும் படம்.
பொள்ளாச்சியைச் சேர்ந்த சில இளையர்கள் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் பணியாற்ற பெங்களூரு செல்கிறார்கள். அங்கு நடக்கும் விஷயங்களின் தொகுப்புதான் இந்தப் படம்.
“தமிழகத்தில் இருந்து ஓர் அண்ணன் முதலில் பெங்களூரு செல்வார். பிறகு தனது நண்பர்களை அங்கு அழைத்துக்கொள்வார். இதையடுத்து ‘நம் அண்ணன்மார்கள் இருக்கிறார்களே’ என்ற தைரியத்திலும் நம்பிக்கையிலும் மேலும் சில இளையர்கள் அங்கு செல்லும்போது அனைவரும் இணைந்து ஒரு பெரிய குழுவாக மாறுகிறார்கள்.
“திருமணமாகாத அந்த இளையர்களின் வாழ்க்கையைப் பற்றிப் பேசும் படைப்பாகவே ‘பேச்சுலர்’ உருவாகிறது.
“இன்னும் துல்லியமாகச் சொல்வதென்றால் இது காதல் படம் இல்லை; ஜி.வி. பிரகாஷ் இதில் நாயகனும் அல்ல,” என்று சதீஷ் செல்வகுமார் சொல்வதைக் கேட்டால் ஜி.வி.யின் ரசிகர்கள் நிச்சயம் ஆச்சரியப்படுவார்கள்.
தனது படத்தில் ஜி.வி. பிரகாஷும் ஒரு கதாபாத்திரமாக மட்டுமே வந்து செல்வதாகச் சொல்கிறார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு படத்தை இயக்குவதற்கு ஒப்பந்தமாகி இருந்தாராம் சதீஷ். அதற்கு இசையமைக்க கேட்டு ஜி.வி.யை அணுகியிருக்கிறார். இவர் சொன்ன கதை ஜி.வி.க்கு மிகவும் பிடித்துப்போனதாம்.
உடன் இருந்த நண்பர் ஒருவர் அந்தக் கதையில் உள்ள ஒரு கதாபாத்திரத்துக்கு ஜிவி பிரகாஷ் பொருத்தமாக இருப்பார் என்று கருத்து தெரிவிக்க, அதையடுத்து ஜி.வி.யால் அதில் நடிக்க முடியுமா என்று சதீஷ் கேட்டுள்ளார்.
“ஜி.வி. பிரகாஷ் சார் உடனடியாக நடிக்க ஒப்புக்கொண்டார். அவரை எப்படி வித்தியாசமாக திரையில் காட்டுவது என்ற சுவாரசியத்துடனேயே வேலை பார்த்தோம். ஒரு விடலைப்பையன் முதிர்ச்சி அடைந்த ஆணாக மாறக்கூடிய காலகட்டத்தில் நடக்கும் விஷயங்கள்தான் அவர் ஏற்றுள்ள கதாபாத்திரத்தின் சுவாரசியமான அம்சம்.
அவரது ‘பேச்சுலர்’ வாழ்க்கைக்குள் ஒரு பெண் குறுக்கிடுகிறாள். அவர்தான் நாயகி திவ்யபாரதி. இருவருக்கும் இடையே நடக்கும் விஷயங்கள் இளையர்களை வெகுவாகக் கவரும்,” என்கிறார் சதீஷ் செல்வகுமார்.
திவ்யபாரதிக்கு முன்பு பல பெண்கள் நடிக்க வாய்ப்பு கேட்டு வந்தார்களாம். ஆனால் பக்கத்து வீட்டுப் பெண்ணைப் போல் தமிழில் பேசி இயல்பாக நடித்ததுடன் தனது தோற்றத்தாலும் திவ்யபாரதி கவர்ந்திழுக்கவே அவரைத் தேர்வு செய்துள்ளனர். முனீஷ்காந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இதற்கிடையே வசந்தபாலன் இயக்கும் புதிய படத்துக்கும் இசையமைக்க ஒப்புக்கொண்டுள்ளார் ஜி.வி. பிரகாஷ்.