தனுஷுடன் மோதும் நயன்தாரா
தனுஷுடன் திரையில் மோத உள்ளார் நயன்தாரா. அவரது நடிப்பில் உருவாகி உள்ள 'நிழல்' என்ற மலையாளப் படம் நாளை (ஏப்.9) வெளியீடு காண உள்ளது.
இந்நிலையில் தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள 'கர்ணன்' படமும் நாளைதான் வெளியீடு காண்கிறது. இப்படத்தின் கேரள வெளியீட்டு உரிமையை நடிகர் மோகன்லால் கைப்பற்றி உள்ளார். இரு படங்களுக்குமே கேரளாவில் பெரிய அளவில் விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது.
தனுஷ் பட வெளியீட்டால் நயன்தாரா படம் ஒத்தி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தனது படம் நிச்சயம் வெற்றிபெறும் என்பதால், வெளியீட்டுத் தேதியை மாற்றவேண்டாம் என்று கூறிவிட்டாராம் நயன்தாரா.
இணையத்தொடரில் நடிக்கும் பிரியா
நடிகை பிரியா பவானி சங்கர் தொடர்ந்து பல படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார்.
அடுத்த ஆண்டு இறுதிவரை கால்ஷீட் இல்லை என்றாலும் இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் அவரை விடுவதாக இல்லை.
தற்போது 'குருதியாட்டம்', 'ஓமணப் பெண்ணே', 'பொம்மை', 'ஹாஸ்டல்'. ருத்ரன்', '10 தல' என ஒரே சமயத்தில் பத்து படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் பிரியா. மேலும் இணையத் தொடர் ஒன்றிலும் நடிக்கிறார்.
"முதன்முறையாக அத்தொடரில் செய்தியாளர் வேடத்தில் நடிக்கிறேன். இணையத் தொடர் உருவாக்கப்படும் விதம் பிரமிக்க வைக்கிறது. திரைப்படங்களுக்கு இணையாக செலவு செய்கிறார்கள் என்கிறார் பிரியா.
'ஐரா' படத்தின் இயக்குநர் சர்ஜுன் இயக்கும் இணையத் தொடர் இது. ராமேஸ்வரத்தில் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்து, தற்போது சென்னையில் முகாமிட்டுள்ளனர்.