சுமார் 12 ஆண்டுகள் காவல்துறையில் வேலை பார்த்துவிட்டு சினிமா பக்கம் வந்துள்ளார் அறிமுக இயக்குநர் தமிழ். வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். விக்ரம் பிரபுவை வைத்து 'டாணாக்காரன்' என்ற படத்தை இயக்குகிறார்.
காவல்துறை பயிற்சி குறித்து விவரிக்கும் படமாக உருவாகி வருகிறது இப்படம். தமிழ் சினிமாவில் இப்படிப்பட்ட கதைக்களத்துடன் ஒரு படம் இதுவரை வெளியாகவில்லை என உறுதியாகச் சொல்கிறார் தமிழ்.
"பொதுவாக காவல்துறை பயிற்சி என்பது முதலில் பயமுறுத்தும். அதில் 15 குழுக்கள் வரை இருக்கும். ஒவ்வொரு குழுவிலும் தலா முப்பது பேர் இருப்பார்கள். ஒவ்வொரு குழுவிலும் யார் பதக்கம் வாங்குகிறார்கள் என்பதுதான் போட்டி. பயிற்சியின் முதல் நாளிலிருந்தே இந்தப் போட்டி தொடங்கிவிடும்," என்கிறார் தமிழ்.
இந்தப் படத்தின் கதைப்படி பயிற்சி முகாமில் இந்திய அளவில் புகழ்பெற்ற பயிற்சியாளர் ஒருத்தர் இருப்பாராம். அவருக்கும் அங்கே பயிற்சிக்கு வந்திருக்கும் விக்ரம் பிரபுவுக்கும் மோதல் ஏற்படுகிறது.
'என்னைத் தாண்டி நீ காக்கிச் சட்டை போட்டுவிட முடியுமா பார்க்கலாம்' என்று அவர் சவால் விட, 'நான் சாதித்துக் காட்டுகிறேன்' என்று அமைதியாகச் சவாலை ஏற்பாராம் விக்ரம் பிரபு. அதில் வென்று காக்கிச் சட்டையை எப்படி போடுகிறார் என்பதுதான் கதை.
"காவல்துறை பயிற்சியை அடிப்படையாக வைத்து தமிழில் படங்கள் வந்ததில்லை என நினைக்கிறேன். அதிலும் ஒன்பது மாதங்கள் நடக்கும் இந்தப் பயிற்சியில் பல சுவாரசியங்கள் புதைந்துள்ளன.
"நான் 12 ஆண்டுகளுக்கும் மேலே காவல்துறையில் இருந்தவன். என் நண்பர்கள் இப்போதும் கூட அத்துறையின் பல்வேறு துறைகளில் பணியாற்றுகிறார்கள். இப்போது சந்திக்க நேர்ந்தாலும் பயிற்சியின்போது நடந்தவற்றைப் பற்றிதான் அதிகம் பேசுவோம். எங்களுக்கு பயிற்சிதான் கல்லூரிக்காலம். அதுகுறித்துப் பேசும்போது குழந்தைகளாக மாறிப்போவோம்.
விக்ரம் பிரபு எதிர்பார்ப்புக்கு ஏற்ப அமைந்தாரா?
"இந்தப் படத்தை 12 கதாநாயகர்களிடம் சொல்லி இருந்தேன். நிறைய உழைக்க வேண்டியிருக்கும் என்று சிலர் பயந்தனர். இந்தக் கதையை என்னால் சரிவர கையாள முடியுமா என்று சிலருக்கு சந்தேகம்.
"ஆனால் ஆர்வமாக நடிக்க வந்தார் விக்ரம் பிரபு. வேலூர் பகுதியில் வெயில் சுட்டெரிக்கும் என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் படப்படிப்புக்காக அங்கேயே தங்கி இருந்தார். முப்பது நாள்கள் இடைவிடாமல் நடந்த படப்பிடிப்பின்போது மிகுந்த ஈடுபாடு காட்டினார்.
"இதுபோன்ற கதைகளில் பெண் கதாபாத்திரங்களை நுழைப்பது சிரமம். இருப்பினும் பெண் எழுத்தர் பாத்திரத்தை உருவாக்கி, அஞ்சலி என்ற புதுமுகத்தை அறிமுகம் செய்துள்ளோம். பயிற்சியாளர்களாக லால், எம்.எஸ்.பாஸ்கர், போஸ் வெங்கட் மூவரும் நடித்துள்ளனர். இவர்களுடைய முகங்கள் மட்டுமே ரசிகர்களுக்குத் தெரிந்திருக்கும். மற்ற அனைவருமே புதுமுகங்கள்தான்," என்கிறார் தமிழ்.
25 படத் தயாரிப்பு நிறுவனங்களிடம் இந்தக் கதையைச் சொன்னபோது பலர் ஆர்வம் காட்டவில்லையாம். சிலர் தயாரிப்புச் செலவுகள் அதிகமாக இருக்கும் எனப் பயந்திருக்கிறார்கள். ஆனால் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு துணிந்து களம் இறங்கி உள்ளார்.
சரி, விக்ரம் பிரபு என்ன சொல்கிறார்?
"காவல்துறை பயிற்சி குறித்து இந்தப் படத்தில் நடிக்கும் முன்பு அதிகம் கேள்விப்பட்டதில்லை. ஆனால் மிகவும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது. வரிசையில் நின்று சோறு வாங்கிச் சாப்பிடுவது, இரவு பயிற்சியாளர் விசில் அடித்ததும் படுத்து தூங்குவது, அதே விசில் சத்தம் கேட்டு காலையில் எழுவது என்பதெல்லாம் மிக சிரமமான விஷயங்கள். ஒருவரது குணாதிசயங்களை உடைத்துத்தான் போலிசாக மாற்றுவார்கள். நிறைய விஷயங்கள் மாறும். நம் நடையே மாறிவிடும். இதையெல்லாம் உணர்ந்து நடிக்க வேண்டும் என்று இயக்குநர் தமிழ் தொடக்கத்திலேயே கூறிவிட்டார். அதைப் புரிந்து கொண்டு நடித்தேன்," என்கிறார் விக்ரம் பி்ரபு.