எந்நேரமும் அழகான சிரிப்புடன் வலம் வருவதுதான் ரம்யா பாண்டியனின் தனிச் சிறப்பு. 'ஜோக்கர்', 'இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்' எனத் தரமான படங்களைத் தேர்வு செய்து நடித்து வருகிறார்.
சினிமாவுக்கு வரும் எண்ணமே தமக்கு இருந்ததில்லை என்பவர், ஒரு குறும்படத்தில் நடித்த பிறகே தமக்கு அந்த ஆசை வந்ததாகச் சொல்கிறார்.
இந்நிலையில், தனது நடிப்பை சூர்யாவும் ஜோதிகாவும் பாராட்டியது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக அண்மை பேட்டியில் கூறியுள்ளார் ரம்யா.
'இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்' படத்தைப் பார்த்த நடிகர் சிவகுமாரின் மனைவியும் வெகுவாகப் பாராட்டினாராம்.
"கிராமத்து சாமானிய மக்களுடன் அவர்களில் ஒருவராக வாழ்ந்து காட்டி இருக்கிறீர்கள் என்று அவர் குறிப்பிட்டதை வாழ்நாள் முழுவதும் மறக்க இயலாது," என்கிறார் ரம்யா.
"இந்தப் படத்தில் நடிக்கும் வாய்ப்பு எளிதில் கிடைக்கவில்லை. சூர்யாவும் ஜோதிகாவும் தயாரிக்கும் படம் என்பது தொடக்கத்தில் எனக்குத் தெரியாது. 'தமிழ் பேசக்கூடிய மண் சார்ந்த பெண் தேவை' என சூர்யாவின் '2டி' தயாரிப்பு நிறுவனம் அளித்த விளம்பரத்தைக் காண நேரிட்டது. உடனடியாக சம்பந்தப்பட்டவர்களைத் தொடர்புகொண்டேன்.
"நடிப்பு, ஒப்பனைத் தேர்வுக்குப் பிறகே தேர்வு செய்தனர். அதிலும், நான் நடித்த ஒரு காட்சியின் காணொளிப்பதிவை சூர்யாவுக்கும் ஜோதிகாவுக்கும் கைபேசி மூலம் அனுப்பி, அவர்கள் என்னைப் பாராட்டி, பச்சைக்கொடி காட்டிய பிறகே நான் நடிப்பது உறுதியானது," என்று சொல்லும் ரம்யாவுக்கு தமிழ்த் திரையுலகில் அதிகமான நண்பர்கள் இல்லையாம்.
ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பு தமக்கு மிகவும் பிடிக்கும் என்பவர், தாம் அவரது தீவிர ரசிகை என்கிறார்.
"நான் எப்போது தொடர்புகொண்டாலும் அவர் நட்பாக, அன்பாகப் பேசுவார்," என்கிறார் ரம்யா.