சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, யோகி பாபு, ஜெகபதி பாபு உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி உள்ள படம் 'அண்ணாத்த'. இமான் இசையமைத்துள்ளார். இப்படம் தீபாவளிக்கு வெளிவர உள்ள நிலையில் படத்தின் சுவரொட்டியுடன் படத்தில் இடம்பெறும் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்நிலையில் நேற்று ஆயுதபூஜை தினத்தன்று இந்தப் படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியாகியுள்ளது. 1.44 நிமிடம் ஓடக்
கூடிய இந்த முன்னோட்டக் காட்சி முழுவதிலும் ரஜினி
மட்டுமே இருக்கிறார்.
முன்னோட்டக் காட்சியில் "கிராமத்தானை குணமாத்தான பார்த்திருப்ப... கோபப்பட்டு பார்த்தது இல்லையே... காட்டாறு... அவனுக்கு கரையும் கிடையாது, தடையும் கிடையாது...," என்ற வசனத்தைப் பேசியபடி சண்டையில் இறங்குகிறார்.
ஆங்காங்கே திருவிழா காட்சிகள், சண்டை என இந்த முன்னோட்டக் காட்சி பயணிக்கிறது. இறுதியில் 'வா சாமி' என ரஜினி கூற ஒவ்வொரு வாகனமும் வெடித்துச் சிதறுவது போன்று முடித்துள்ளனர்.
இந்த முன்னோட்டக் காட்சியைப் பார்க்கும்போது நிச்சயம் கிராமத்து மண்வாசனை கலந்த அதிரடி சண்டைப் படமாகவும் குடும்பப் படமாகவும் இருக்கும் என்பதை மட்டும் உணர முடிகிறது. 'விஸ்வாசம்' படத்தின் பல காட்சிகளை ஆங்காங்கே நினைவு
படுத்துகிறது.
படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இருந்தும் ரஜினியைத் தவிர வேறு யாரும் இந்த முன்னோட்டக் காட்சியில் காணப்படவில்லை. ஒருவேளை ஒருவரைக் காட்டி
ஒருவரை விட்டால் பிரச்சினையாகிவிடும் என்பதால் இதுபோல் ஒட்டுமொத்தமாக யாரையும் காட்டவேண்டாம் என்று நினைத்திருப்பார்கள்.
'அண்ணாத்த' படத்தின் முன்னோட்டக் காட்சியை ரஜினி ரசிகர்கள் வரவேற்றுள்ளனர்.
காட்சி வெளியாகி முப்பது விநாடிகளிலேயே 3.25 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றதோடு டுவிட்டரில் தேசிய அளவில் பகிரப்பட்டும் வருகிறது.