இந்திய சினிமாவின் தலைசிறந்த இயக்குநர்களில் ஒருவராகக் கொண்டாடப்படும் இயக்குனர் கே.எஸ். சேதுமாதவன் சென்னையில் உயிரிழந்தார்.
அவருக்கு வயது 90.
மலையாள திரையுலகில் புதுமைகள் புகுத்தியவரான சேதுமாதவன், மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் அறுபதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
தமிழில் நம்மவர், மறுபக்கம், நிஜங்கள் போன்ற குறிப்பிடத்தக்க திரைப்படங்களை அவர் இயக்கியுள்ளார்.
மறுபக்கம் திரைப்படத்திற்காக இந்திய அரசாங்கத்தின் தங்கத்தாமரை விருதை 1991ஆம் ஆண்டில் வென்றுள்ள சேதுமாதவன், ஒன்பது கேரளத்தின் மாநில விருதுகளையும் 10 தேசிய விருதுகளையும் சிறந்த இயக்குனர் பிரிவில் வென்றுள்ளார்.
அன்னாரில் உடலுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
‘காலத்தால் அழியாத காவியங்களைத் திரையில் படைத்த கே.எஸ்.சேதுமாதவன் புதிய அலை சினிமாவின் ஊற்றுமுகம். மலையாள சினிமாவின் தரத்தைத் தீர்மானித்த அடிப்படை விசைகளுள் ஒருவர். தன் கலைச்சாதனைகளால் என்றென்றும் நினைவு கூறப்படுவார். என் சேது சாருக்கு, நல்ல சினிமாவை கற்பித்த ஆசிரியருக்கு அஞ்சலிகள்’ என்று நடிகர் கமல்ஹாசன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்து இருக்கிறார்.
திரு கமல்ஹாசனை, 'கண்ணும் கரலும்', 'கன்னியாகுமரி' ஆகிய படங்களின் மூலம் மலையாளத் திரையுலகில் முறையே குழந்தை நட்சத்திரமாகவும் கதாநாயகனாக அறிமுகப்படுத்தியவர் திரு சேதுமாதவன் ஆவார்.
அவரது மறுபக்கம் திரைப்படம் தமது உச்சி வெயில் குறுநாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டதை டிவிட்டர் தளத்தில் நினைவுகூர்ந்தார் மூத்த எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி.
அப்படத்துக்கு இந்தியாவின் தேசிய திரைப்பட மேம்பாட்டு வாரியம் ரூ. 16 லட்சம் நிதி வழங்கியதையும் அதில் ரூ. 2 லட்சத்தை மிச்சப்படுத்தி, திரு சேதுமாதவன் வாரியத்திடம் திரும்ப வழங்கியதையும் திரு இந்திரா பார்த்தசாரதி குறிப்பிட்டார்.
அதுவரை யாரும் அவ்வாறு அப்படிச் செய்ததில்லை என்று திரைப்பட மேம்பாட்டு வாரிய அதிகாரி ஒருவர் தம்மிடம் குறிப்பிட்டதையும் திரு இந்திரா பார்த்தசாரதி நினைவுகூர்ந்தார்.