முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் 'விருமன்' திரைப்படம் திட்டமிட்டபடியே உருவாகி வருகிறது. இந்தக் கூட்டணி ஏற்கெனவே 'கொம்பன்' படத்தைத் தந்துள்ளது.
இந்த முறையும் மாறுபட்ட கதைக்களத்தில், நல்ல கருத்துகளை உள்ளடக்கிய படத்தை தரப்போகிறார்களாம். இயக்குநர் சங்கரின் மகள் அதிதிதான் நாயகி.
"நம் தமிழ் மண்ணின் மக்கள் முன்பு முன்னாடி எப்படி இருந்தனரோ, இன்றைக்கும் அப்படித்தான் இருக்கவேண்டும் என்று சொல்பவன்தான் 'விருமன்'. உறவுகள் புடைசூழ ஒற்றுமையோடு இருக்க வேண்டும், அவர்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் முன்வந்து நிற்க வேண்டும் என்பதில் தெளிவாக இருப்பவன்," என்று தன் பட நாயகனின் குணாதிசயத்தை விவரிக்கிறார் முத்தையா.
'கொம்பன்' படத்தில் கோபமும் முரட்டுத்தனமும் நிறைந்த பாசக்காரராக நடித்த கார்த்தி, இந்தப் புதிய படத்தில் அன்பை அதிகம் முன்னெடுப்பாராம். படத்தின் இறுதிக்காட்சியில் மிக நீளமான வசனத்தைப் பேசி, கண்ணீர் சிந்தி, அவர் நடித்ததைக் கண்டு படப்பிடிப்பில் இருந்த அத்தனை பேரும் கண்கலங்கி விட்டனராம்.
"எனக்கு கார்த்தியிடம் பிடித்தது அவரது முகம்தான். அவரை சாதுவாகவும் காட்டலாம் அதிரடிக்காரராகவும் மாற்றலாம். வழக்கம்போல் இந்தப் படத்திலும் அவர் நடிப்பில் அசத்தி உள்ளார். அவரது மதிப்பு புதிய உயரத்தை எட்டிப் பிடிக்கும். நான் எழுதியதைவிட, சொன்னதைவிட, எதிர்பார்த்ததைவிட கார்த்தி பங்களித்துள்ளார்.
"விஞ்ஞானம் வளர்ந்து கைபேசிகள் வந்ததும், அவை நம்மை வேறு இடத்திற்குக் கொண்டு போயிருக்கலாம். ஆனால் உறவுகளை மீறி வேறு எதுவும் இங்கே இல்லை.
"விருமன்' படம் பார்க்கும்போது நம் உறவுகள், சித்தப்பா, பெரியப்பா, அங்காளி, பங்காளி தலைக்கட்டுகள் அத்தனைபேர் நினைவும் மனதில் வந்துபோகும்," என்கிறார் முத்தையா.
'விருமன்' படத்தின் கதை என்ன?
'விருமனு'க்கு உறவுகள் புடைசூழ ஒற்றுமையோடு வாழ ஆசை. வாழ்க்கையில் எல்லோரும் தவறுகள் செய்வோம். ஆனால் அந்தத் தவறுகளை யாராவது தட்டிக் கேட்க வேண்டும்.
"நம் பெற்றோர், உடன் பிறந்தவர்கள், உறவினர்கள் என யாராவது ஒருவர் தவறைச் சுட்டிக்காட்ட வேண்டும். 'இது நல்லது கிடையாது, சரியான வாழ்க்கை முறைக்குள் வராது' என்று நமக்கு அறிவுறுத்தத்தான் அவர்கள் இருக்கிறார்கள். இதைச் செய்தால்தான் அது நேர்மையான உறவு. அந்த நேர்மையைப் பேச வருபவன்தான் 'விருமன்'.
"மேலும் மேலும் தவறு செய்யும்போது வாழ்க்கை கேள்விக்குறி ஆவதைத் தட்டிக் கேட்பவனாக 'விருமன்' இருப்பான்.
"இதில் கார்த்திதான் விருமன் என்று புரிந்திருக்கும். அது குலசாமி பெயர். விருமன் என்றால் தேனி மாவட்டத்தில் பிரம்மன் என்பார்கள். உசிலம்பட்டி பகுதியில் முணுசாமி என்று கும்பிடுவார்கள். இதுதான் கதைக்களம்."
'விருமன்' படத்தில் பிரகாஷ்ராஜ், ராஜ்கிரண் இருவரும் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். அவர்களுடன் கார்த்தியும் இணைந்து வரும் காட்சிகள் ரசிகர்களை அசர வைக்குமாம்.
கதாநாயகி அதிதியின் நடிப்பு எப்படி?
"அவர் எனக்கும் மகள் மாதிரிதான். எனது தொழில் சார்ந்த மூத்த, முன்னணி இயக்குநரின் மகளை என் மகளாகவே பார்க்கிறேன்.
"சங்கர் சார் நம் குழுவை நம்பி மகளை அனுப்பி வைத்துள்ளார். அதை நினைவில் வைத்துக் கொண்டு அதிதியிடம் உள்ள முழுத் திறமையையும் வெளிக்கொண்டு வரும் பொறுப்பு எனக்கு உள்ளது. இதைத்தான் சூர்யாவும் என்னிடம் கூறினார்.
"கதைப்படி அதிதியின் பெயர் தேன்மொழி. பொதுவாக எனது படங்களில் பெண் கதாபாத்திரங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க விரும்புவேன். எனது இந்த எண்ணத்தைப் புரிந்துகொண்டு அதிதி நடித்துள்ளார். தேனி வட்டாரத்தைச் சேர்ந்த பெண்ணாக திரையில் தோன்றுவார்.
"கேமரா குறித்த பயம் அவரிடம் அறவே இல்லை. எந்தவிதமான தடுமாற்றமும் இன்றி, நாம் சொல்வதை அப்படியே உள்வாங்கி, தமது நடிப்பில் கச்சிதமாக வெளிப்படுத்துகிறார்," என்கிறார் முத்தையா.
'விருமன்' படத்துக்கு யுவன் சங்கர்தான் இசையமைக்கிறார். இன்றைய இளையர்களின் ரசனைக்கு ஏற்றவாறு பாடல்களை உருவாக்கி உள்ளார் என்றும் வார்த்தைகளின் மீது ஏறி நிற்காமலேயே, துள்ளல் இசையைத் தரும் திறமைசாலி அவர் என்றும் முத்தையாவின் பாராட்டுச் சான்றிதழ் தெரிவிக்கிறது.
திரைப்பட உருவாக்கம் என்பது பலர் சேர்ந்து ஆடும் விளையாட்டு. அதில் இயக்குநர், நாயகன், நாயகி, ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவருக்கும் அதில் பங்குண்டு. எல்லாம் சரியாக அமைந்தால் படத்தின் வெற்றியை யாராலும் தடுக்கமுடியாது," என்கிறார் இயக்குநர் முத்தையா.