காதல், நகைச்சுவை படங்களில் கவனம் செலுத்தி வந்த அசோக் செல்வன் இப்போது தன் பாதையை மாற்றி உள்ளார். 'வேழம்' என்ற தலைப்பில் உருவாகும் புதுப் படத்தில் இவர் அதிரடி நாயகனாக நடிக்கிறார்.
சந்தீப் ஷ்யாம் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் ஐஸ்வர்யா மேனன், ஜனனி என இரு கதாநாயகிகள் நடிக்கின்றனர். படத்தின் முதல்தோற்றச் சுவரொட்டி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
'ஹாஸ்டல்' படத்தை அடுத்து கார்த்திக் இயக்கத்தில் 'நித்தம் ஒரு வானம்' உட்பட பெயரிடப்படாத மூன்று தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார் அசோக்.
இந்நிலையில் அண்மைய பேட்டி ஒன்றில், இந்தாண்டு தமது நடிப்பில் இரண்டு படங்கள் அடுத்தடுத்து வெளியாகி இருப்பது உற்சாகம் அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
"'மன்மத லீலை', 'ஹாஸ்டல்' ஆகிய இரு படங்களுமே வசூல் ரீதியில் வெற்றி பெற்றுள்ளன. எனது படங்கள் திரைஅரங்குகளில் வெளியாவது கூடுதல் மகிழ்ச்சியை அளித்துள்ளது. கொரோனா நெருக்கடி காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பெரும்பாலான திரைஅரங்குகளில் புதுப்படங்கள் வெளியாகவில்லை என்பதை மனத்திற்கொள்ள வேண்டும்.
"திரையுலகம் மீண்டும் முழுவீச்சில் செயல்படத் தொடங்கியுள்ளது. இந்த நேரத்தில் ஏராளமான படங்கள் திரை அரங்குகளில் வெளியீடு காண காத்திருக்கின்றன. இந்நிலையில் பெரிய திரையில் எனது படங்கள் வெளியாவதை பெரிய விஷயமாகக் கருதுகிறேன்," என்கிறார் அசோக் செல்வன்.
அதிக கதாபாத்திரங்கள் உள்ள கதைகளில் நடிக்க தாம் தயங்குவது இல்லை என்று குறிப்பிடுபவர், ஒரு படத்தில் இரண்டு நாயகர்கள் நடிப்பதால் அதன் வணிக மதிப்பு அதிகரிக்கும் என்கிறார்.
"ஒவ்வொருவருக்கும் தனிச் சந்தை மதிப்பு உள்ளது. பலர் இணைந்து நடிக்கும்போது அந்தப் படைப்பின் மதிப்பும் அதிகரிக்கும். ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் அதிகரிக்கும்போது, அவற்றை ஈடுகட்டும் வகையில் ஒரு படம் உருவாகும் பட்சத்தில் நிச்சயம் வெற்றிபெறும்.
"நீண்ட நாள்களாக முழு நீள நகைச்சுவைப் படத்தில் நடிக்க வேண்டும் என்று காத்திருந்தேன். அந்தச் சமயம் பார்த்து 'ஹாஸ்டல்' பட வாய்ப்பு தேடிவந்தது. அது மலையாளத்தில் வெற்றிபெற்ற படத்தின் மறுபதிப்பு. எனினும் அந்தப் படம் வெளியாகி ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு மறுபதிப்பு உருவானது.
"இதுவரை நான் மறுபதிப்பு படங்களில் நடித்ததில்லை. என் எதிர்பார்ப்புக்கு ஏற்ப கதையும் கதாபாத்திரமும் அமைந்ததால் நடித்தேன். எனினும் மீண்டும் ஒரு மறுபதிப்பில் நான் நடிக்க சில ஆண்டுகளாகும்," என்கிறார் அசோக் செல்வன்.
தாம் இயக்குநர் வெங்கட் பிரபுவின் தீவிர ரசிகர் என்று குறிப்பிடுபவர், 'சென்னை-28' படத்தை மிகவும் ரசித்ததாகச் சொல்கிறார்.
"வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்குமா என்று யோசித்த வேளையில், அவரே திடீரென தொடர்புகொண்டு பேசியது இன்ப அதிர்ச்சி. உடனே ஒப்புக்கொண்டேன். தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநருடைய படத்தில் நடித்தது, கனவு நனவானதுபோல உள்ளது.
"அவரது இயக்கத்தில் உருவான 'மன்மத லீலை' படத்தில் நடித்த பிறகு எனக்கு யாரும் பெண் கொடுக்க முன்வரமாட்டார்கள் என்று நானே என் நண்பர்களிடம் நகைச்சுவையாகச் சொல்வேன்.
"அந்தப் படத்தின் முன்னோட்டக்காட்சித் தொகுப்பை பார்த்துவிட்டு என் நண்பர்கள்கூட கிண்டல் செய்தனர். அது வயது வந்தவர்களுக்கான படம் என்றும் அப்படிப்பட்ட படங்களில் நடிக்கலாமா என்றும் கேள்வி கேட்டனர்.
"ஆனால் நான் எனது முடிவில் உறுதியாக இருந்தேன். அதற்குரிய பலனும் கிடைத்தது. வெங்கட் பிரபு போன்ற இயக்குநரை நம்பி தைரியமாக நடிக்கலாம்.
"நமக்கான மதிப்பும் மரியாதையும் நிச்சயம் அதிகரிக்கும்," என்று சொல்லும் அசோக் செல்வன், முதன்முறையாக அடிதடிப் படத் தில் நடிப்பது நல்ல அனுபவமாக அமையும் என நம்புகிறார்.
'வேழம்' படத்தின் கதைக்கள மும் திரைக்கதையும் ரசிகர்களை நிச்சயம் கவரும் என்று குறிப்பிடுபவர், புதுப் படத்துக்காக தம்மைத் தயார்படுத்திக்கொண்டுள்ளதாகச் சொல்கிறார்.
"எனக்கு எண்ணிக்கை விளையாட்டில் நம்பிக்கையோ ஆர்வமோ இல்லை. பத்து ஆண்டுகளில் பத்து உருப்படியான படங்களில் நடித்து முடித்த மனநிறைவு உள்ளது. இவ்வளவுதானா என்று கேட்பவர்கள் குறித்து நான் கவலைப்படவில்லை.
"அசோக் செல்வன் படம் என்றால் அது தரமான படைப்பாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கை ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டால் அதுவே எனக்குப் போதுமானது.
"மற்றபடி எனக்கு நெருக்கமான நண்பர்களே என்னைக் கிண்டல் செய்தாலும் நான் எதையும் பொருட்படுத்துவதில்லை.
"எனது படங்களின் விமர்சனங்களில் இருந்து நல்ல கருத்துகளை எடுத்துக்கொள்வேன். எனது குறைகள் சுட்டிக்காட்டப்பட்டால் அவற்றைத் திருத்திக்கொள்ளத் தயங்கமாட்டேன். விரைவில் எனது நடிப்பில் பல நல்ல படங்கள் வெளிவரும்," என்கிறார் அசோக் செல்வன்.