திரைப்படங்களில் நடிக்க விரும்புவதாக தன் தந்தையிடம் கூறியபோது அவர் அதிர்ச்சி அடைந்ததாகச் சொல்கிறார் விருமன் பட நாயகியும் இயக்குநர் சங்கரின் மகளுமான அதிதி.
முதல் படம் வெளியாகி, இவரது நடிப்பை விமர்சகர்களும் ரசிகர்களும் பாராட்டி உள்ளனர். இந்த வரவேற்பு தம்மை நெகிழ வைத்துள்ளதாகச் சொல்கிறார்.
"சிறு வயது முதல் எனக்கு இசையில் ஆர்வம் அதிகம். ஐந்து வயது முதல் வாய்ப்பாட்டு கற்று வருகிறேன். என்னதான் மருத்துவம் படித்திருந்தாலும், மனதுக்குள் நடிகையாக வேண்டும் என்ற ஆசையும் ஓரத்தில் இருந்தது.
"அப்பாவும் இசைப்பிரியர் என்பதால் நானும் இசையில் கவனம் செலுத்துவதை ஊக்குவித்தார். படிப்பை முடித்ததும் என்ன வேண்டுமானாலும் செய்துகொள் என்று அம்மா அனுமதி கொடுத்துவிட்டார். ஆனால் அப்பாவிடம் சினிமா ஆசையை விவரித்தபோது அதை ஏற்றுக்கொள்ள அவருக்கு அவகாசம் தேவைப்பட்டது," என்கிறார் அதிதி.
தன் மகளின் விருப்பம் குறித்து மனைவியிடம் கலந்தாலோசித்த பின்னர் மறுநாள், அதிதி சினிமாவில் நடிக்க சம்மதித்துள்ளார் சங்கர். தமது முடிவின் பின்னணியையும் மகளிடம் விளக்கி உள்ளார்.
"மறுநாள் அப்பா என்ன சொல்லப் போகிறாரோ என்ற அச்சம் இருந்தது. நேராக என்னிடம் வந்தவர், 'தந்தை என்ற நிலையில் இந்த விஷயத்தில் நான் முடிவெடுப்பது மிகவும் சிரமமான விஷயம்.
"அதேசமயம் ஓர் இயக்குநராக யோசிக்கும்போது என் மகள் இந்தத் துறைக்கு மிகப் பொருத்தமானவள் என்பதை உணர்ந்துள்ளேன்.
"எனவே இயக்குநர் என்ற வகையில் உன் விருப்பத்துக்கு தடையாக இருக்கமாட்டேன்' என்று வெளிப்படையாகக் கூறிவிட்டார்," என்று சொல்லும் அதிதி, தமது கல்லூரி நாள்களை இன்றளவும் அசைபோடுகிறார்.
கல்லூரி வகுப்புகளை புறக்கணித்துவிட்டு தோழிகளுடன் சினிமா பார்க்கக் கிளம்பிவிடுவாராம். அதிலும் 'தலைவர்' ரஜினியின் தீவிர ரசிகையாம்.
"கல்லூரிக்குப் போவதாகச் சொல்லிவிட்டு 'பேட்ட', 'தர்பார்' படம் பார்க்கப் போய்விடுவேன். எனினும் அப்படிச் செய்துவிட்டு வீட்டில் வந்து நானே உண்மையைச் சொல்லிவிடுவேன்.
"அப்பா மிகப்பெரிய இயக்குநராக இருக்கும்போது வேறு இயக்குநரின் படத்தில் அறிமுகமாக வேண்டிய காரணம் என்ன என்று பேட்டிகளின்போது கேட்கிறார்கள். அப்பாவின் இயக்கத்தில் நடிக்க எனக்கு மட்டுமல்ல அப்பாவுக்கே விருப்பம் இல்லை. ஏனெனில், என் திறமையை நிரூபித்து, எனக்கான ஓர் இடம் கிடைத்ததும் அது தானாகவே நடக்க வேண்டும் என்று விரும்பினோம்.
"ஆனாலும், அப்பாவிடம் வாய்ப்புக் கேட்டிருக்கிறேன். நடிப்புத் தேர்வு வைத்து, அதில் மனநிறைவு ஏற்பட்டால் மட்டும் வாய்ப்பு கொடுங்கள் சார் என்று கூறிவிட்டு, அங்கு நிற்காமல் ஓடிவிட்டேன். கூடிய விரைவில் என் ஆசைப்படி நடக்கும் என நம்புகிறேன்," என்கிறார் அதிதி.
திரைத்துறையில் புதிதாக அறிமுகமாகி இருந்தாலும் ஏராளமானோர் தம்மிடம் எதையும் எதிர்பார்க்காமல் அளவுகடந்த அன்பு காட்டுவதாகக் குறிப்பிடுபவர், நடிகையாகிவிட்டதால் மருத்துவ மேற்படிப்புக்கு நேரம் ஒதுக்க முடியாமல் போய்விட்டது என்கிறார்.
"இதுதான் சினிமாவால் இதுவரை நான் பெற்றதும் இழந்ததும் ஆகும். அதேசமயம் தினமும் மேற்கொள்ளும் நடைப்பயிற்சி, என் செல்லப்பிராணியுடன் விளையாடுவது, வீட்டில் விளையாட்டாக ரகளை செய்வது என மற்ற விஷயங்கள் எதுவும் மாறவே இல்லை.
"அப்பா ஒருவேளை 'அந்நியன்', 'சிவாஜி' படங்களின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் பட்சத்தில் சிறு வேடத்திலாவது நடிக்க விரும்புகிறேன்.
"சூர்யா உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் ஆசையும் உள்ளது," என்கிறார் அதிதி.
அதேசமயம் வாரிசு என்பதால் மட்டும் திரையுலகில் வெற்றி கிடைத்துவிடாது என்று குறிப்பிடுபவர், திரையுலகத்தில் பணியாற்ற தேவைப்படும் திறமை தம்மிடம் உள்ளது என்றும் கூறுகிறார்.