தான்யா ரவிச்சந்திரனைப் போல் அர்ப்பணிப்புடன் செயல்படும் கதாநாயகிகளை பார்ப்பது அரிது என்கிறார் இயக்குநர் சாம் ஆண்டன்.
இவரது இயக்கத்தில் அதர்வாவும் தான்யா ரவிச்சந்திரனும் இணைந்து நடித்துள்ள 'டிரிக்கர்' படம் தற்போது வெளியீடு கண்டுள்ளது.
இந்தப் படத்தின் கதை மிகவும் பிடித்துப்போனதால் தயக்கமின்றி கால்ஷீட் ஒதுக்கி நடித்ததாகச் சொல்கிறார் தான்யா.
காவல்துறையில் பணியாற்றிய தன் தந்தையால் தீர்த்து வைக்க முடியாத வழக்குக்கு மகன் தீர்வு காண்கிறார் என்பதுதான் இப்படத்தின் ஒரு வரிக்கதை.
"காவல்துறையின் செயல்பாடுகள் குறித்து இப்படத்தில் அதிகம் பேசி இருக்கிறோம். 'வீடு சுத்தமாக இருந்தால்தான் நாடு சுத்தமாக இருக்கும் என்பதைவிட ஒரு காவல் நிலையம் சுத்தமாக இருந்தால்தான் அதைச் சுற்றியுள்ள ஊர் சுத்தமாக இருக்கும்' என்று சொல்லி இருக்கிறோம்.
"இயக்குநர் சாம் ஆண்டனின் திரைக்கதை அருமையாக அமைந்தது. காதல், நகைச்சுவை, குடும்ப உணர்வுகள் என்று எல்லாம் அளவோடு இடம்பெற்றுள்ளன. அதனால் ஒவ்வொரு காட்சியிலும் அனுபவித்து நடித்தேன்," என்கிறார் தான்யா.
பதிலுக்கு, இவருக்கு பாராட்டுப் பத்திரம் வாசிக்கிறார் இயக்குநர் சாம் ஆண்டன்.
"தான்யா மிக இனிமையான குணாதிசயம் கொண்டவர். பொதுவாக, படப்பிடிப்பு என்றால் மற்ற அனைவருக்கும் முன்பாகவே நான் படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்குச் சென்றுவிடுவேன். அதேபோல் ஒரு காட்சியை அரைகுறையாக விட்டுவிடாமல் முழுமையாக படமாக்கிய பிறகே ஓய்வெடுப்பேன்.
"ஆனால், எனக்கும் முன்பாகவே ஒருவர் படப்பிடிப்புக்கு வருவார் என்றால் அது தான்யாதான். நேரம் தவறாமை என்பதற்கு அவர் ஒரு மிகச் சிறந்த உதாரணம். அதேபோல் காட்சிகளை, வசனங்களை உள்வாங்கிக் கொண்டு தேர்ந்த நடிப்பை வழங்குவார்.
"தமது நடிப்பு குறித்து யாரும் சிறு குறையும் சொல்லிவிடக் கூடாது என்பதில் மிகுந்த கவனம் செலுத்தும் நடிகை. திரையுலகில் அவர் போக வேண்டிய தூரம் நிறைய உள்ளது. எனினும், இப்பயணத்தின் முடிவில் அவர் சிறந்த நடிகையாக உருவாகி இருப்பார் என்று உறுதியாக நம்புகிறேன்," என்கிறார் சாம் ஆண்டன்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு 45 நாள்கள் நடந்துள்ளது. அவற்றுள் 29 நாள்களுக்கு சண்டைக்காட்சிகள் மட்டுமே எடுத்தனராம். இதற்காக அதர்வா உடலை வருத்திக்கொண்டு நடித்தாராம்.
"அதர்வாவைப் பற்றி நான் புதிதாகச் சொல்ல ஒன்றுமில்லை. எவ்வளவு கடினமான காட்சி என்றாலும் சலித்துக்கொள்ள மாட்டார். எப்போதுமே முகத்தில் புன்னகை ஏந்தியிருக்கும் நடிகர். அவரது உழைப்பு வியக்க வைக்கிறது.
"நாம் என்ன எதிர்பார்க்கிறோமோ அதை குறைவின்றி தரக்கூடிய கதாநாயகன். இயக்குநரின் நடிகர் என்று சொல்வார்கள் அல்லவா, அதற்கான நல்ல உதாரணம் அதர்வா.
"ஒரு முறை கதையைக் கேட்டுவிட்டால் அதன் பிறகு படம் முடியும் வரை இயக்குநரிடம் எதற்காகவும் கேள்வி எழுப்ப மாட்டார்.
"அவரிடம் இருந்து இவ்வளவு அருமையான ஒத்துழைப்பு கிடைக்கும் என எதிர்பார்த்ததில்லை. 'நீங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்' என்று முகத்துக்கு நேராகப் பேசக்கூடியவர்.
"அவருடன் மீண்டும் இணைந்து செயல்பட வேண்டும் என மனம் விரும்புவதில் வியப்பு ஏதும் இல்லை," என்கிறார் சாம் ஆண்டன்.