தமது கணவர் பல வகையிலும் தம்மை சித்திரவதை செய்ததாகச் சொல்கிறார் கண்பார்வையற்ற பின்னணிப் பாடகி வைக்கம் விஜயலட்சுமி.
பல்வேறு மொழிகளில் ஏராளமான திரைப் பாடல்களைப் பாடியுள்ள அவர், கடந்த 2018ஆம் ஆண்டு பலகுரல் கலைஞர் அனூப் என்பவரை திருமணம் செய்துகொண்டார். எனினும் இந்த மணவாழ்க்கை நீண்டகாலம் நீடிக்கவில்லை. அதனால் கணவரைப் பிரிந்துவிட்டார்.
“எனது கணவர் ஒரு ‘சேடிஸ்ட்’. எப்போதுமே என்னுடைய குறைகளை மட்டுமே சுட்டிக்காட்டி வந்தார். அதையே அவர் முழுநேர பணியாகவும் வைத்திருந்தார்.
“திருமணத்துக்குப் பின் எனது பெற்றோரை என்னிடம் இருந்து பிரித்தார். அதையெல்லாம் விட என்னைப் பாட்டு பாடக்கூடாது எனக்கூறி பல்வேறு நிபந்தனைகளை விதித்தார். இதையெல்லாம் ஒரு கட்டத்துக்கு மேல் சகித்துக்கொள்ள முடியவில்லை. பாடல்கள்தான் எனக்கு உயிர். பாடல்கள் இல்லாத ஒரு வாழ்க்கையை நான் வாழ விரும்பவில்லை. அதனால்தான் அவரை விவாகரத்து செய்து பிரிந்துவிட்டேன்,” என்று நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.
டி.இமான் இசையில் இவர் பாடிய ‘சொப்பன சுந்தரி நான் தானே’ என்ற பாடல் பட்டி தொட்டியெல்லாம் பெயர் வாங்கிக்கொடுத்தது. கடந்த 2016ஆம் ஆண்டிலேயே விஜயலட்சுமியின் பெற்றோர் அவருக்குத் திருமணம் செய்து வைக்க முயற்சிகள் மேற்கொண்டனர்.
திருமண நிச்சயதார்த்தமும் நடைபெற்றது. எனினும் சில காரணங்களால் அத்திருமணம் நடைபெறவில்லை.
தற்போது தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் தயாராகும் திரைப்படங்களில் பாடி வரும் விஜயலட்சுமி, பல்வேறு இசை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். இந்நிலையில், அவர் தமது திருமண வாழ்க்கை குறித்து வெளியிட்ட தகவல்கள் ரசிகர்களை அதிர வைத்துள்ளது.