விளையாட்டுகளின் மூலம் பல இனம், சமயங்களைச் சேர்ந்தவர் களை ஒன்றுபடுத்தும் நோக்கத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மெக்பர்சன் இன, சமய நன்னம்பிக் கைக் குழு காற்பந்துப் போட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. 'ஹோம் யுனைட்டெட்' காற் பந்துச் சங்கத் திடலில் நிகழ்ந்த இப்போட்டிக்கு கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சு ஆதரவு அளித்தது. ஆண்களுக்கான பொதுப் பிரிவு, 18 வயதினருக்கு உட்பட்ட பிரிவு ஆகிய இரண்டு பிரிவுகள் இப்போட்டியில் இடம்பெற்றன. ஒவ்வொரு பிரிவிலும் 30 குழுக்கள் என்று மொத்தம் 60 குழுக்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டன.
காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நிகழ்ந்த போட்டிகளில் விளையாட்டாளர் கள், பார்வையாளர்கள் என சுமார் 500 பேர் கலந்துகொண்டனர். பல இனங்களும் சமயங்களும் ஒன்றுகூடி பழக இந்நிகழ்ச்சி ஒரு தளமாக அமைந்தது என்றார் இப்போட்டியின் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் அன்பழகன் தங்கவேலு. "வெவ்வேறு பின்னணிகளைக் கொண்ட விளையாட்டாளர்களை வரவழைத்து நட்பார்ந்த முறையில் போட்டிகள் நடத்தப்பட்டன. பல இனம், சமயம் சார்ந்தவர்களிடையே புரிந்துணர்வையும் நட்பையும் வளர்க்கும் நிகழ்வாக இந்தக் காற்பந்துப் போட்டி அமைந்தது," என்று கூறினார் திரு அன்பழகன். அத்துடன், திரு எடி வூன், திரு பாலகிருஷ்ணன் வீராசாமி, திரு வெங்கடேஷ் நாராயணசுவாமி, திரு செல்வம் வரதப்பன் ஆகிய பிரமுகர்கள் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். வெற்றியடைந்த குழுக்களுக்கு இவர்கள் பரிசுகளை வழங்கினர்.
'செங்காங் ரெஞ்ஜர்ஸ் ஏ' அணி (சிவப்பு சட்டை) 'லா ப்ளாட்டா ஜூனியர்ஸ்' அணியோடு (ஊதா சட்டை) ஆண்களுக்கான பொதுப்பிரிவு காலிறுதி ஆட்டத்தில் மோதியது.