மொழிகளைக் கற்றுக்கொள்வது நம் அடையாளத்தை உணர்த்த உதவுகிறது என்றும் இருமொழி ஆற்றல் சிங்கப்பூர் கதையை மையமாகக் கொண்டது என்றும் கல்வி அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்துள்ளார்.
ஆங்கிலம் பேசினாலும் நமது கலாசாரம் அது அல்ல என்று குறிப்பிட்ட திரு ஓங், வெவ்வெறு இடங் களிலிருந்து மக்கள் சிங்கப்பூருக்குக் குடியேறியதில், நாடு உருவானது. அதன் விளைவாக, துரித வளர்ச்சி கண்ட சிங்கப்பூர் கலாசாரம் ஆசியாவின் தாக்கத்தைக் கொண்டிருக்கிறது என்றார்.
‘‘நம் பிள்ளைகள் நமது முன்னோடிகள் பிறந்த நாடுகளுடன் அணுக்கமான உறவைக் கொண்டிருக்காவிட்டாலும், தாய்மொழி நமது சிங்கப்பூர் கதையை அவர்களுக்குப் புரிய வைக்கின்றது. இது நம் சிங்கப்பூர் அடையாளத்தை மையப்படுத்தியது, இந்த வளமான மரபுடை மையை இளைய தலைமுறையினருடன் பகிர்ந்துகொண்டு பெருகச் செய்ய வேண்டும்,’’ என நல்லாசிரியர் விருது 2019 நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர் ஓங் வலியுறுத்தினார்.
“உலகமயமாகிவரும் இன்றைய சூழலில் கூடுதலான மொழிகளைக் கற்றுக்கொள்வதால் பல கதவுகள் திறக்கப்படுகின்றன. இது கூடுதல் சாதக நிலையாக அமைகிறது. குறிப்பாக, உலகின் முன்னணி பொருளியல் நாடுகளை அண்டை நாடுகளாகக் கொண்டிருக்கும் சிங்கப்பூரை பொறுத்தவரையில் இது உண்மையான நிலை,” என்றார் அவர்.
மாணவர்கள் தங்கள் தாய் மொழியை மேலும் ஆழமாகக் கற்க வகை செய்ய, மொழி விருப்பப் பாட திட்டம் உயர்நிலைப் பள்ளிக்கும் விரிவாக்கம் செய்யப்படுகிறது. அதையொட்டி கல்வி அமைச்சின் பாடக்கலைத்திட்ட வரைவு மேம்பாட்டுப் பிரிவினரும் முதன்மை ஆசிரியர்களும் இணைந்து இத்திட்டத்தில் பங்குபெறும் ஆசிரியர்களை சுவாரசியமான முறையில் கற்பித்தலில் ஈடுபடுத்த தயார்படுத்துவர் என்றார் அமைச்சர்.
அவர்களுக்காக இலக்கியப் பணித் திட்டங்கள், குறும்பட விளக்கம், நாடகமாக்குதல், இலக்கிய துறையின் நிபுணர்களுடன் கலந்துரையாடல் போன்றவை திட்டமிடப்படும்.
தமிழ்மொழி விருப்பப்பாடத் திட்டம் வழங்கும் பள்ளிகள் தாய்மொழி அடிப்படையில் பள்ளி நேரடிச் சேர்க்கையையும் (DSA) வழங்குகின்றன. இதற்கு நல்ல ஆதரவு கிடைத்திருப்பதோடு அதற்கான நேர்முகத் தேர்வுகளும் நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.
தமிழ்மொழி உட்பட மற்ற தாய்மொழிகளைக் கற்பதில் ஆர்வம் அதிகரித்து வருவதைக் காட்டும் நல்ல அறிகுறிகள் இவை என்றார் திரு ஓங்.
தமிழ்மொழி ஆர்வத்தைத் தூண்டுவதில் சமூக அளவிலும் பல நடவடிக்கைகள் இடம்பெறு
வதாகக் குறிப்பிட்ட அவர், இதில் தமிழ் முரசின் பங்கையும் சுட்டினார். தேசிய கலைகள் மன்றத்துடன் இணைந்து தமிழ் முரசு வளரும் படைப்பாளர்களுக்காக நடத்திய ‘விசை’ பயிலரங்குகள், பாலர்களுக்கான ‘பாலர் முரசு’, மாணவர்களுக் கான ‘மாணவர் முரசு’ ஆகிய மாணவர் பதிப்புகளை அவர் உதாரணங்களாக எடுத்துக்கூறினார்.
மேலும், தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் ‘அழகே தமிழே’ வருடாந்திர நிகழ்ச்சி, சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கத்தினர் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்காக உருவாக்கும் கற்றல் வளங்கள் மற்றும் ஆசிரியர்களுக்காக சங்கம் ஏற்படுத்தித் தரும் நிபுணத்துவ மேம்பாட்டு வாய்ப்புகளையும் அமைச்சர் குறிப்பிட்டார்.
தமிழாசிரியர்களின் அர்ப்பணிப்பை அங்கீகரிப்பதுடன், அவர்கள் தொடர்ந்து ஊக்கத்துடன் செயலாற்ற நல்லாசிரியர் விருதுகள் உதவுகின்றன என்றார் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் தலைவர் திரு விக்ரம் நாயர்.
எதிர்காலத்தில் பாலர் பள்ளி ஆசிரியர்களையும் இந்த விருதுப் பட்டியலில் இணைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்றார் அவர்.
2002ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்பட்டு வரும் நல்லாசிரியர் விருதுக்கு இவ்வாண்டு தொடக்கப்பள்ளி பிரிவில் 278 நியமனங்களும் உயர்நிலைப் பள்ளி/தொடக்கக்கல்லூரி பிரிவில் 148 நியமனங்களும் கிடைக்கப்பெற்றன என்று கூறினார் தமிழ் முரசின் இணை ஆசிரியரான திரு வீ.பழனிச்சாமி.