ஆங்கிலத்தை முதன்மை மொழியாகப் புழங்கும் சிங்கப்பூர் சூழலில் தமிழ்க் கதைகளை வாசிப்பதில் குழந்தைகள், சிறுவர்களுக்கு ஆர்வத்தை எவ்வாறு ஏற்படுத்தலாம் என்பது குறித்துக் கலந்துரையாடல் அங்கம் ஒன்று ஆசிய சிறுவர் விழாவில் (AFCC) இடம்பெற்றது.
குழந்தைகளிடம் வாசிப்பு ஆர்வத்தையும் புத்தாக்கச் சிந்தனையையும் வளர்க்க எத்தகைய வழிமுறைகளைக் கையாளலாம் என்பது குறித்து மொழி கற்பித்தலில் நிபுணத்துவமும் நீண்ட அனுபவமும் ஆர்வமும் உடைய டாக்டர் மகா ஸ்ரீபதி, தமிழ் முரசின் மூத்த உதவி ஆசிரியர் திரு ஜெ.சிவகுமார், தமிழ் முரசின் உதவி ஆசிரியரும் முன்னாள் தமிழாசிரியையாக நீண்ட கால அனுபவம் பெற்றவருமான திருமதி சி.சுபாஷினி ஆகிய மூவரும் அலசினர்.
கலந்துரையாடலைத் தொடங்கிவைத்துப் பேசிய திருமதி சுபாஷினி, தமது இரு குழந்தை களையும் வாசிப்பில் ஈடுபடுத்தும் தமது அணுகுமுறையை விளக்கினார். ‘Don’t let the pigeon ride the bus’ என்ற சிறுவர் நூலை அவருடைய மகன்கள் விரும்பிப் பார்ப்பதால், அந்த நூலில் உள்ள ஆங்கில வாக்கியங்களை அவர் தமிழாக்கம் செய்து அதன் கீழ் ஒட்டி, அவர்களுக்கு வாசித்துக் காட்டுகிறார். அதன்மூலம் இரு மகன்களும் அந்த நூலில் இடம்பெற்றுள்ள சொற்களின் பொருளைத் தமிழில் தெரிந்துகொள்கிறார்கள். பின்னர் நூலில் இடம்பெற்ற அதே சொற்களை அன்றாடம் பயன்படுத்த திருமதி சுபாஷினி அவர்களை ஊக்குவிக்கிறார்.
கதைகள் மூலம் பண்புகளையும் எப்படிச் சொல்லித் தரலாம் என்பதை அவர் கூறினார். தம்முடைய மகனுக்கு வாகனங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். அது பற்றிய புத்தகத்தை அவர் பெரிதும் விரும்பி வாசிப்பார். ஒருநாள் குப்பை வண்டியைப் பார்த்து மூக்கை மூடிய மகனிடம், அந்தக் குப்பைகள் நமது வீடுகளில் இருந்து வருவதைக் கூறி, அவற்றைச் சுத்தம் செய்பவர்களின் சிறப்பை அவர் எடுத்துச்சொன்ன அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார். அன்றாடம் இவ்வாறு குப்பைகளை எடுத்துச் செல்வோர், எப்போதும் அந்த நுர்நாற்றத்தைப் பொறுத்துக்கொண்டு பணியைச் செய்வதைப் பற்றி எளிய முறையில் விளக்கி மகனுக்குப் புரிய வைத்தாராம். அத்துடன் அந்த வாகனத்தைப் பற்றியும் வாசித்த புத்தகத்துடன் தொடர்புபடுத்தினாராம்.
மற்றவர்களை மதிக்க வேண்டும் என்பதை நேரடியாகச் சொல்லாமல், இவ்வாறு வாழ்க்கை நடைமுறைகள் மூலம் பிள்ளை களுக்கு எடுத்துக்காட்டும்போது அவர்கள் அதனை எளிதாகப் புரிந்துகொள்வார்கள் என்றார் அவர்.
சிறுவர்களுக்கு நல்ல பழக்க வழக்கங்களையும் பண்புகளையும் கற்பிப்பது வாசிப்பின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும் என்றார் திரு சிவகுமார். தமிழில் மாணவர்களுக்கு ஏற்ற, அவர்களது ஆர்வத்தைத் தூண்டும் வகையில் அறிவியல், சாகசம் வகைகளைச் சேர்ந்த புத்தகங்கள் பல உள்ளன என்றார் அவர். அழ.வள்ளியப்பாவின் குழந்தைப் பாடல்கள் நல்ல தமிழ்ச் சொற்களையும் பண்புகளையும் அறிவாற்றலையும் குழந்தைகளிடம் வளர்க்கும் என்றார் அவர்.
ஆங்கிலத்தில் உள்ளது போன்ற நூல்களே தமிழில் இருக்க வேண்டும் என்பதில்லை என்று கூறிய டாக்டர் மகா ஸ்ரீீபதி, அவ்வாறு நூல்களை மொழியாக்கம் செய்யும்போது இன்றைய பிள்ளைகளுக்கு அதில் ஆர்வம் இல்லாமல் போகலாம் எனக் குறிப்பிட்டார்.
ஆங்கிலத்தில் கிடைக்காத, புதுமையான பல விஷயங்களைத் தமிழில் வாசிக்கக் கொடுக்கும்போது அவர்களுக்கு அதில் ஆர்வம் ஏற்படும், விரும்பிப் படிப்பார்கள் என்ற அவர், படங்கள் இல்லாத புத்தகங்கள் பிள்ளைகளின் கற்பனை ஆற்றலை வளர்க்கும் எனக் கூறினார்.
படங்களைப் பார்க்கும் குழந்தைகள் படத்தை வைத்துக் கதையைச் சொல்கிறார்கள். அவர்கள் மனதில் வார்த்தைகளோ வர்ணனைகளோ பதிவதில்லை. மேலும் படத்தில் இருக்கும் காட்சியை மட்டுமே அவர்கள் பார்க்கிறார்கள்.
அதற்கு அப்பால் தங்கள் சிந்தனை மூலம் ஒரு காட்சியை அவர்களால் கற்பனை செய்ய முடியவில்லை. இதனால் அவர்களின் சிந்தனைத் திறனும் படைப்பாற்றல் திறனும் தடைபடுகின்றன என்றார் அவர்.
அதே கருத்தைப் பகிர்ந்துகொண்ட திரு சிவகுமார், வாசிக் கின்ற கதையில் வரும் வர்ணனையைக் கொண்டு காட்சியைக் கற்பனை செய்யும்போது சிறாரின் சிந்தனை ஆற்றல் வளரும் என்றார்.
குழந்தைகள் வாசிக்க வேண்டும் என்றால், வீட்டில் அவர்களின் பார்வை படும் இடங்களில் எல்லாம் புத்தகங்கள் நிறைந்திருக்க வேண்டும். அவை அவர்களுக்கு ஏற்ற நூல்களாக இருப்பது சிறப்பு. அத்துடன் வீட்டில் இருப்பவர்களும் குழந்தைகளின் பார்வையில் படும்படியாக வாசிக்க வேண்டும் என்று மூவரும் கூறினர்.