206 மாணவர்களுக்குக் கிட்டத்தட்ட $71,000 மதிப்பிலான கல்வி உதவி நிதி, உபகாரச் சம்பள விருதுகளைக் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ஸ்ரீ ருத்ர காளியம்மன் ஆலயம் வழங்கியது.
டெப்போ சாலையில் உள்ள கோயிலின் ஏற்பாட்டில், இவ்விருது நிகழ்ச்சி 1996ஆம் ஆண்டிலிருந்தே நடைபெற்று வருகிறது. இவ்வாண்டு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார் சுற்றுப்புற, நீர்வள அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி.
தேசிய ஒற்றுமையையும் சமய நல்லிணக்கத்தையும் பேணுவதற்கான சிங்கப்பூரின் உறுதியை இவ்விருதுகள் பறைசாற்றுவதாக திரு மசகோஸ் குறிப்பிட்டார்.
“நமது நாட்டின் விழுமியங்களைக் கடைப்பிடிப்பதற்கும் மற்ற சமயங்களைச் சேர்ந்த குடும்பங்களுக்கு உதவுவதற்கும் ஆலயம் எடுத்துக்கொண்டுள்ள பணியைப் பாராட்டுகிறேன்,” என்றார் அமைச்சர்.
“மாணவர்கள் நம்பிக்கையுடன் தங்களின் கனவுகளை நனவாக்க இது போன்ற சமூக ஆதரவு முயற்சிகள் இன்றியமையாதவை,” என்றார் அவர்.
$3,500க்கும் குறைவான வருமானம் பெறும் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன என்றும் கடந்த ஆறு ஆண்டுகளாக பல இன, சமய மாணவர்களுக்கும் விருதுகள் வழங்கப்படுகின்றன என்றும் கூறினார் ஸ்ரீ ருத்ர காளியம்மன் ஆலயத்தின் தலைவர் வி. அழகப்பன்.
“இந்திய, சீன, மலாய் மாணவர்கள் என அனைத்து இனத்தவர்களுக்கும் விருதுகள் தரப்படுகின்றன. சவால்களை எதிர்நோக்கும் மாணவர்களுக்குப் பாரபட்சமின்றி உதவும் நோக்கில் இம்முயற்சியை மேற்கொண்டு வருகிறோம்,” என்றார் திரு அழகப்பன்.
விருதைப் பெற்ற பவதாரணி அசோகன், ரிபப்ளிக் பலதுறை தொழிற்கல்லூரியில் மருந்தக அறிவியல் துறையில் படித்து வருகிறார். ஆறு உறுப்பினர்களைக் கொண்ட குடும்பத்தில் அவரின் தந்தை ஒருவர்தான் வருமானம் ஈட்டுகிறார்.
“பயணம், உணவு போன்ற செலவுகளுக்கு இந்த நிதியுதவி உதவும். தந்தை மீதுள்ள பாரம் குறையும். இந்த கல்வி விருதுகள் ஓர் ஆசீர்வாதம் போன்றது,” என்றார் பவதாரணி.
வருங்காலத்தில் சுகாதாரத் துறையில் பணியாற்ற விரும்புகிறார் பவதாரணி. புற்றுநோய் போன்ற நோய்களின் தாக்கம் அதிகரித்து வருவதால் இத்துறை மிக முக்கியமாக விளங்கும் என்று குறிப்பிட்டார் அவர்.
“உயர்நிலைப் பள்ளியிலிருந்து இவ்விருதுகளைப் பெற்று வருகிறேன். ஒற்றைப் பெற்றோராக என்னையும் எனது நான்கு சகோதரர்களையும் பார்த்துக்கொள்கிறார் என் தாயார். அவரின் சுமையைக் குறைக்க இந்த நிதியுதவி உதவும்,” என்றார் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் (கிழக்கு) நகர்ப்புற பசுமை மற்றும் நிலச் சீரமைப்புத் துறையில் படிக்கும் கேசவ ராஜா, 17.
“செலவுகளுக்கு என் பெற்றோரை மட்டும் நம்பியிருப்பதற்குப் பதிலாக பகுதி நேரமாக வாரயிறுதி நாட்களில் வேலை செய்கிறேன். தினசரி செலவுகள் போக எதிர்காலத்தில் என் மேற்படிப்புக்கும் இந்த நிதியுதவி உதவும்,” என்றார் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் (மத்திய நிலையம்) விண்வெளி இயந்திரத் தொழில்நுட்பத் துறையில் பயிலும் ஆகாஷ் செல்வம், 18.