கொரோனா கிருமித்தொற்று பல வழிகளிலும் மக்களை உடலுறுதியிலும் நலனிலும் அக்கறை செலுத்த வைத்துள்ளது.
உடல்நலம் பேண உடற்பயிற்சியில் ஈடுபடுபவர்கள் சிலர், வீட்டிலிருந்து வேலை செய்வதால் சுறுசுறுப்பாக இருக்க உடற்பயிற்சியில் ஈடுபடுகிறார்கள்.
‘வெர்ஜின் எக்டிவ்’, ‘சஃப்ரா பொங்கோல்’ போன்ற உடற்பயிற்சி கூடங்கள் கொரோனா கிருமித் தொற்றியவர்களால் பயன்படுத்தப்பட்டது என்பது தெரிய வந்ததை அடுத்து ‘வர்ஜின் எக்டிவ்’ உட்பட சில உடற்பயிற்சிக் கூடங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
உடற்பயிற்சி கூடங்களுக்கு தொடர்ந்து செல்லவா வேண்டாமா என்ற ஐயம் சிலரிடையே இருந்தபோதிலும் உடற்பயிற்சிக் கூடங்களுக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக உடற்பயிற்சி கூட நடத்துனர்கள் சிலர் தெரிவித்தனர்.
வாரத்தில் இரண்டிலிருந்து மூன்று முறை உடற்பயிற்சி கூடத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் இப்போது மூன்று அல்லது நான்கு முறை வருவதாகக் குறிப்பிட்டார் கடந்த 4 ஆண்டுகளாக ‘தி ஃப்சிக் லேப்’ உடற்பயிற்சி கூடத்தை நடத்திவரும் திரு ஜே தேவராஜ், 37.
வீட்டிலிருந்து வேலை செய்வதால் பலருக்கு உடற்பயிற்சி செய்ய கூடுதல் நேரம் கிடைப்பதாக அவர் சொன்னார்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் அவர்கள் உடற்பயிற்சியில் ஈடுபடுவதாக அவர் குறிப்பிட்டார்.
அவரது வாடிக்கையாளர்களில் ஒருவரான 14 வயது மோநிஷ் ராயன் தற்போது உடற்பயிற்சிக் கூடத்திற்கு வருவதை தற்காலிகமாக ரத்து செய்துள்ளார். ஆனால் அவர் வீட்டிலிருந்தவாறு பயிற்சி செய்ய, பயிற்றுவிப்பாளர் ஜே அவருக்கு சில காணொளிகளை அனுப்பியுள்ளார்.
உடல் நலமில்லாவிட்டால் உடற்பயிற்சிக் கூடத்திற்கு வரவேண்டாம் என தமது வாடிக்கையாளர்களை அறிவுறுத்தி வருவதாக ‘தி ரையிட் ஃப்ட்’ உடற்பயிற்சி நடத்திவரும் திரு வி. துரைராஜாசிங்கம் சொன்னார்.
உடல் வெப்பநிலை சோதித்தல், தினமும் உடற்பயிற்சிச் சாதனங்களை துடைப்பது போன்ற நடவடிக்கைகள் நடப்பில் இருப்பதாகவும் தனிப்பட்ட முறையில் பயிற்சி வழங்கப்படுவதால் உடற்பயிற்சிக் கூடத்திற்கு வருபவர்களை எளிதில் கண்காணிக்க முடிகிறது என்றும் அவர் விளக்கினார்.
உள்புற நடவடிக்கைகளில் ஈடுபட விரும்பாத வாடிக்கையாளர்களுக்கு தமது உடற்பயிற்சி கூடத்தின் வெளியே உள்ள திறந்த வெளியிலும் பயிற்சி வழங்குகிறார் கடந்த 9 ஆண்டுகளாக உடற்பயிற்சிக் கூடத்தை நடத்தி வரும் இவர்.
வாரஇறுதி நாட்களில், புக்கிட் தீமா இயற்கைப் பாதுகாப்பு வனப்பகுதி வழியாக செல்வது போன்ற நடவடிக்கைகளிலும் அவர்கள் ஈடுபடலாம்.
“தற்போது நிலவரம் பரவாயில்லை ஆனால் கொவிட்-19 நிலவரம் மோசமடைந்தால் வாடிக்கையாளர்களின் வீட்டுக்குச் சென்று பயிற்சி வழங்கவும் ஆயத்தமாக இருக்க வேண்டும்,” என்று திரு துரை ராஜாசிங்கம் கூறினார்.
இவரது வாடிக்கையாளர்களில் ஒருவரான 35 வயது அரசாங்க ஊழியர் திருமதி சந்தியா தேவி வாரத்தில் இரு முறை உடற்பயிற்சிக் கூடத்திற்கு செல்வது வழக்கம்.
அலுவலகம் முடிந்து உடற்பயிற்சி கூடத்திற்குச் செல்லும் இவர், பெரும்பாலான வேளைகளில் குறைவான எண்ணிக்கையில் அக்கூடத்திற்கு வாடிக்கையாளர்கள் வருவதால் கிருமித் தொற்று பரவல் அபாயம் குறைவாக உள்ளது என்றார்.
அதிகமானோர் கூடும் இடங்களுக்கு செல்லாமல் இருப்பது, தனிப்பட்ட சுகாதார பழக்க வழக்கங்களைத் தொடர்ந்து கடைப்பிடிப்பதன் மூலமும் கொவிட்-19 நிலவரத்தால் பதற்றம் அடையத் தேவையில்லை என்பது இவரின் கருத்து.
வர்த்தக ஆய்வாளராக பணியாற்றும் 30 வயது ரா.விக்ரமன் வார நாட்களில் உடற்பயிற்சிக் கூடத்திற்குச் செல்பவர்.
தற்போது பெரும்பாலும் வீட்டில் இருந்தே வேலை செய்யும் இவர், வேலை தொடங்குவதற்கு முன் அல்லது முடிந்த பிறகு போத்தோங் பாசிரில் அமைந்துள்ள ‘எனிடைம் ஃபிட்னஸ்’ உடற்பயிற்சிக் கூடத்திற்கு செல்வார்.
தீவு முழுவதும் இயங்கும் பிரபல உடற்பயிற்சி கூடமான இது 24 மணி நேரமும் இயங்கும். கொவிட்-19 நிலவரத்தைக் கருதி உச்ச நேரங்களில் அதன் வசதியை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தி வருகிறது.
“உடற்பயிற்சி தெளிவான சிந்தனைக்கு வழிவகுப்பதோடு விழிப்புடன் செயல்படவும் உதவுகிறது,” என்றார் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க பயிற்சி செய்து வரும் விக்ரமன்.
வாரத்தில் சுமார் நான்கு முறை தமது வீட்டின் அருகில் உள்ள ‘தி ரையிட் ஃப்ட்’ உடற்பயிற்சி கூடத்திற்குச் செல்கிறார் 70 வயது திரு பீட்டர் ஐயாபிள்ளை.
விற்பனை நிர்வாகியாகப் பணியாற்றும் இவர், கடந்த மூன்று ஆண்டுகளாக அவர் தம் உடல் உறுதியை வலுப்படுத்தி வருகிறார். வயதானதும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தொடர்ந்து உடற்பயிற்சி செய்து வருவது முக்கியம் என்றார்.
“அண்மையில் மின்படிக்கட்டிலிருந்து தவறி விழுந்தபோது சிறு காயங்களுடன் என்னால் மீண்டும் வழக்கமான வாழ்க்கைக்கு திரும்ப முடிந்தது. உடற்பயிற்சி செய்யாமல் இருந்திருந்தால் தசைகள் பலவீனமாகி அது நடமாட்டத்தை பாதித்திருக்கலாம்,” என்று தெரிவித்தார் அவர்.
சுகாதார அமைச்சின் வழிமுறைகளை முறையாக பின்பற்றுகையில், ஆரோக்கிய வாழ்க்கையை தொடர்ந்து கடைபிடிக்கலாம் என்பது இவரின் கருத்து.