கொவிட்-19 கிருமித்தொற்று காரணத்தால், வீட்டிலிருந்தவாறு பள்ளி தொடர்பான கற்றல் நடவடிக்கைகளில் தற்போது பிள்ளைகள் ஈடுபடுகின்றனர்.
வழக்கமாக பள்ளிக்குச் செல்லும் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு இது வித்தியாசமான அனுபவம்.
இந்நிலையில் மாறுபட்ட சூழலில் பாடங்கள் கற்பதில் சிலர் சிரமங்களை எதிர்கொள்ளக்கூடும்.
தொடக்கப்பள்ளி மாணவர்களுக்காக ‘டிங்கல் ஃபிரண்ட்’ (Tinkle Friend) எனும் தோழமைச் சேவையை சிங்கப்பூர் சிறுவர் சங்கம் வழங்கி வருகிறது.
தனிமை அல்லது பிரச்சினைகளை எதிர்கொள்ளும் சிறுவர்கள் ஆதரவு, ஆலோசனை பெற சங்கத்தின் இத்தோழமைச் சேவையுடன் தொடர்புகொள்ளலாம்.
இவ்வாண்டின் முதல் மூன்று மாதங்களில், நாளொன்றுக்கு 15 சிறுவர்கள் ‘டிங்கல் ஃபிரண்ட்’ உதவி பெறுவதற்குத் தொலைதொடர்பு அல்லது இணையம் மூலம் உரையாடல் மேற்கொண்டனர். ஆனால் ஏப்ரல் மாதத்தில் நாளொன்றுக்கு 20க்கும் மேற்பட்ட சிறுவர்கள் உதவி நாடினர் என்று சிங்கப்பூர் சிறுவர் சங்கம் தெரிவித்தது.
சிறுவர்களைப் பாதிக்கும் விவகாரங்கள்
பெரும்பாலான சிறுவர்கள் பள்ளி விவகாரங்களைப் பற்றி பேசினர். மதிப்பெண்கள் குறித்த பயம்.குறிப்பாக, தொடக்கப்பள்ளி இறுதி ஆண்டு தேர்வு எழுதும் மாணவர்களிடையே இந்தப் பயம் தென்பட்டது. நட்புறவு பற்றியும் சிலர் பகிர்ந்துகொண்டனர்.
ஆனால் அண்மைக் காலமாக வீட்டிலிருந்தவாறு கற்றலில் ஈடுபடுவதன் சிரமங்கள் பற்றியும் அதிகரித்துள்ள தினசரி வீட்டுப் பாடங்
கள் பற்றியும் அவர்களில் பலர் கவலை தெரிவித்தனர்.
இந்நிலையில், பள்ளிக்குச் சென்று ஆசிரியர்களுடனும் சக நண்பர்களுடனும் நேரடியாக பழக பெரும்பாலானோர் விரும்புகின்றனர். சில மாணவர்கள் குடும்பத்தினர் அல்லது தங்களது ஆரோக்கியம், பெற்றோரின் வேலை, நிதி நிலவரம் குறித்த கவலைகளையும் விளக்கினர்.கற்றல் முறையில் மாற்றம் வந்துள்ளதால் கூடுதல் வீட்டுப்பாடங்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்டதாக சிலருக்கு தோன்றுகிறது.வேறு சிலருக்கு வீட்டுப்பாடங்களை சீக்கிரம் செய்து முடிப்பதால் மீதியுள்ள நேரத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கின்றனர்.
மற்றொரு பிரிவினருக்கு வீட்டில் போதிய இட வசதி இல்லாத குறை.
ஒரே வீட்டில் அதிகமானோருடன் தொடர்பு இருப்பதால் மன உளைச்சலை ஏற்படுத்தும் சூழல் அங்கு ஏற்படக்கூடும். தங்கள் குடும்பத்தினரோடு அடிக்கடி
வாக்குவாதம் ஏற்பட்டது என்றும் சிலர் கூறினர்.
பெற்றோர் என்ன செய்யலாம்
பதற்றம், கவலை போன்ற உணர்ச்சிகளை இத்தருணத்தில் தங்கள் பிள்ளைகள் அனுபவிக்கக்கூடும் என்பதை பெற்றோர் முதலில் உணர வேண்டும்.
மனநிலை மாற்றம், பிடிவாதப் போக்கு போன்றவற்றைப் பிள்ளைகள் வெளிகாட்டும்போது அதற்கான காரணத்தைப் பெற்றோர் கண்டறியலாம்.
மாற்றங்களுக்கு ஏற்ப எவ்வாறு தங்கள் தினசரி நடவடிக்கைகளை சமாளித்து வருகின்றனர் என வெளிப்படையாக பிள்ளைகளிடம் கலந்து பேசலாம்.
இவ்வாறு செய்யும்போது பிள்ளைகளுடனான பிணைப்பு வலுப்படுகிறது. தங்களின் வாழ்க்கையில் உரிமை எடுத்துக்கொள்ளும் விதத்தில் அவர்களுடன் சேர்ந்து தினசரி நடவடிக்கை அட்டவணையை உருவாக்கலாம். அதில் கற்றல் அம்சங்களுடன் கேளிக்கை நடவடிக்கைகளையும் உள்ளடக்கலாம்.
சேர்ந்து செய்யும் நடவடிக்கைகள்
பிள்ளைகளை சமையல் அல்லது ‘பேக்கிங்’ நடவடிக்கையில் ஈடுபடுத்தலாம். இணையத்தில் இதற்கான குறிப்புகள் பலவும் உள்ளன. பெற்றோர் வீட்டிலிருந்து தங்கள் பிள்ளைகளுடன் சேர்ந்து உடற்
பயிற்சி செய்யலாம். இன்னும் இதை சுவாரசியமாக்க, குடும்ப உறுப் பினர்கள் தங்களுக்கிடையிலான உடற்பயிற்சி அல்லது நடனப்போட்டியில் பங்கெடுக்கலாம்.
பிள்ளைகள் தங்கள் நண்பர்களோடு தொடர்ந்து தொடர்பில் இருக்க, காணொளி அல்லது திறன்பேசி தொடர்பு வழி அவர்களை இணைக்க உதவலாம். பிள்ளைகள் ஒருவருக்கொருவர் ஆதரவு கொடுக்கும் விதத்தில் பேசும்போது அது நேர்மறையாக தாக்கத்தை ஏற்படுத்தும். நண்பர் அல்லது குடும்ப உறுப்பினர் ஆதரவு இல்லாத பட்சத்தில், புதிய பொழுதுபோக்கில் மாணவர் ஈடுபட ஊக்குவிக்கலாம். புதிய இசைக்கருவியை வாசிக்க கற்றுக்கொள்வது, நடனம், புத்தகம் வாசித்தல், நாளேடு எழுதுதல் போன்ற நடவடிக்கைகள் இதற்கு எடுத்துக்காட்டு. ஒரு குறிக்கோளை நோக்கி செயல்பட ஆதரவு வழங்கலாம். உதாரணத்திற்கு, ஒரு புகைப்படத் தொகுப்பை உருவாக்குவது.
இது அவர்களது பொழுதை பயனுள்ள வழிகளில் கழிக்க உதவும்.