மனிதர்களுக்கு அடிப்படையில் தேவைப்படும் ஒன்று தூக்கம். தூக்கமின்மை என்பது சிங்கப்பூரில் சர்வசாதாரணமான ஒன்றாகிவிட்டது. பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளிலிருந்து வயது முதிர்ந்தவர்கள் வரை பலரும் போதிய தூக்கமின்றி உள்ளனர். போதுமான அளவு தூக்கம் உடல் சீராக இயங்க உதவுகிறது. ஆனால், மின்னிலக்கச் சாதனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ள இன்றைய அவசர உலகில் போதிய உறக்கம் இல்லாமல் பல நோய்கள் ஏற்படும் நிலை வந்துவிட்டது.
இந்நிலையில், தூக்கத்தின் அவசியத்தை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த மாதம் 19ஆம் தேதி அனைத்துலக தூக்க தினம் அனுசரிக்கப்படுகிறது. இவ்வாண்டின் தூக்க தினத்தை முன்னிட்டு கண்களுக்கு விருந்தாக, சிந்தனையைத் தூண்டும் விதமாக நடத்தப்படுகிறது ‘சிங்கப்பூர் இந்திய திரைப்பட, நாடக ஆர்வலர்கள்’ (சிட்ஃபி) அமைப்பின் இருமொழி மேடை நாடகமான ‘துயில்’.
2019ஆம் ஆண்டு இந்த மேடை நாடகப் படைப்பு லசால் கலைக் கல்லூரியில் அரங்கேற்றப்பட்டது. அப்போது அதற்குக் கிடைத்த நல்ல வரவேற்பைத் தொடர்ந்து இம்மாதம் 19ஆம் தேதி தொடங்கி 28ஆம் தேதி வரை பார்வையாளர்கள் வீட்டிலிருந்தவாறே இந்த மேடை நாடகத்தை இணையம்வழி கண்டு மகிழலாம்.
நமது தினசரி வாழ்வில் இடம்பெறும் உண்மை சம்பவங்களை மிகையான கற்பனையுடன் கலந்து, தூக்கத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிய சிந்தனையைப் பார்வையாளர்களிடையே தூண்டுகிறது இந்த சுவாரசியமான மேடை நாடகப் படைப்பு. மூன்றாண்டுகால ஆய்வு, மருத்துவர்கள், நோயாளிகள், பொதுமக்கள் ஆகியோர் சந்தித்த உண்மை சம்பவங்கள் ஆகியவற்றின் தொகுப்பாக இந்த நாடகம் அமைகிறது.
சிங்கப்பூர், அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் உள்ள பார்வையாளர்களை எளிதில் சென்றடைய இந்த நாடகத்தை இணையத்தில் ஒளிபரப்புகிறது சிட்ஃபி. மார்ச் 20ஆம் தேதி இடம்பெறும் ‘துயில்’ நாடக அங்கத்திற்குப் பிறகு உலக தூக்க அமைப்பைச் சேர்ந்த மருத்துவ நிபுணர் ஒருவருடன் கலந்துரையாடல் ஒன்று நடத்தப்படும்.
இந்தியாவிலிருந்து ‘துயில்’ நாடகத்தைப் பார்ப்பவர்களுக்கு இந்திரா காந்தி தேசிய கலை மையத்துடன் ஒரு கலந்துரையாடலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நாடக இயக்குநரும் தயாரிப்பாளருமான திரு சலீம் ஹாதி தெரிவித்தார்.
நாடகத்திற்கான நுழைவுச்சீட்டுகளை 20 தமிழ் முரசு வாசகர்களுக்கு இலவசமாக வழங்கவுள்ளது சிட்ஃபி. இதற்குத் தகுதிபெற தூக்கத்தைப் பற்றி கவிதை, சிறுகதை, கட்டுரை அல்லது பாடலை எழுதி tamilmurasu@sph.com.sg என்ற மின்னஞ்சல் முகவரிக்கு இம்மாதம் 15ஆம் தேதிக்குள் அனுப்பலாம். தேர்வு செய்யப்படும் 20 படைப்புகளுக்கு ‘துயில்’ நாடகத்திற்கான இலவச நுழைவுச்சீட்டுகள் வழங்கப்படும்.
நாடகத்திற்கான நுழைவுச்சீட்டுகளை சிஸ்டிக் இணையப்பக்கத்தில் பெறலாம்.